சாப்பாடு என்பது ஒரு வகை நிறைவு. அதன் ஒவ்வொரு கோணமும் திருப்தியின் பால் நிறைந்தது. உணவின் மீதானதும், உடலின் மீதானதும் கொண்டாட்டமென்பது ஒவ்வொரு மனிதனிற்கும் தேவையானது. அது சுகதேகியான வாழ்க்கையின் ஆரம்பத்திற்கும், வாழ்க்கை மீதான பிடிப்பிற்கும் வழிகோலும். உணவு தொடர்பாக நிறைய சேகரிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்ல உணவுகளை தேடிப்புசிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றை ரசிக்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுகிக்க உணவென்பது ஒரு திறவுகோல். உணவு மீதான தடைகளையும், வர்க்க உணவு நிலையையும், பணத்தின் பண்பு நிறைந்த உணவையும், பணத்தின் பணபல்லாத உணவையும், பணவழி உணவையும், உணவல்லாத நிலையையும் கூடக்கதைக்கலாம். உணவு புசித்தல் ஒரு ஆடம்பரம் அல்ல. தேவைக்கு மேலதிகமில்லாத, உணவு விரயமல்லாத, விருப்ப உணவை உண்ணல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடு. உடை அணிதல் பற்றிப்பேசும் போது உடை தேவையாக இருப்பவரைப்பற்றிப் பேசுதல் இன்றியமையாதது; அவ்வாறே உணவின் தேவையும், அனைவருக்குமான உணவு பற்றிய கருத்தும். இருப்பினும் விருப்ப உணவும் அதன் குணகமும் தனிமனித விழுமியம் சார்ந்த ஒன்று.