முன்பை விட மக்கள் பக்குவப்பட்டிருப்பதாக உணருகிறேன். உணர்ச்சி அரசியலைக் கட்டவிழ்க்காமல் மனிதரோடு சக மனிதர்களாக கை கொடுக்கும் தேவையை உணர்ந்திருக்கிறோம். இதுவே நாகரீகத்தின், பகுத்தறிவின் வளர்சியாகும். மனித குலத்தின் வளர்ச்சியாகவும் இதைப் பார்க்கிறேன்.
அதே வேளை குறித்த ஒரு இனத்தின் மீதான, குறித்த ஒரு மதத்தின் மீதான காழ்ப்புகள்
சிறுகச் சிறுக,
பாதுகாப்புணர்வாயும்,
அச்சவுணர்வாகவும்,
வரலாற்றுப் பாடங்களின் படிப்பினை என்று கூறிக் கொண்டும் வெறுப்பும் துவேசமுமாயும் வெவ்வேறு பெயர் கொண்டு அலைகின்றன.
அந்த இனத்தின், அந்த மதத்தின் மக்களையும்
அதைக் குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்ளவும் செய்து விட்டோம்.
சிந்தியுங்கள் மனிதர்களே!
பாசிச அரசாட்சி நடக்கும் இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒரு சிறு துரும்பு அசைவதும்
அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கிறதா?
இது மதங்களுக்கிடையிலான கலவரம் இல்லை.
மதத் தீவிரவாதம் இல்லை.
என்னுடைய இயலாமையைக் கைப்பற்றி,
என் இயலாமையைக் கொண்டு என் பெயரைப் பாவித்து எங்கள் எல்லோரையும் அடக்கும் வழிமுறை இது!
என்னுடைய பழமையான வழிமுறையில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடித்து என்னையும் என் போன்றவர்களையும் அழிக்கும் செயலிது!
அரசு ஒத்தோடிய பயங்கரவாதம்.
இழப்புகளுக்கு இந்த அரசாங்கம் என்ன பதிலைக் கூறப்போகிறது?
இதுவரை மக்கள் மீது நிகழந்த அரச பயங்கவாதச் செயல்களுக்கு என்ன பதிலோ, அதுவே பதில்.
எமக்கு எம்முடைய பதில் தெரிந்திருக்க வேண்டும்.
எமக்கு எம்மைச் சுற்றி நிகழ்வது தெரிந்திருக்க வேண்டும்.
மனிதர்களே,
உங்கள் கவலைகள் நீங்கி நீங்கள் ஆறுதலடையும் ஒரு பொழுதில் மக்கள் மீது பயங்கரவாதிப் படம் ஏன் வரையப்படுகிறதென்று சிந்தியுங்கள்.
இது ஒரு கெட்ட படிப்பினை நமக்கு.
Comments
Post a Comment