https://www.youtube.com/watch?v=KtPv7IEhWRA
இன்றைக்கு அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது, தீபிகா படுகோனே பங்குபற்றியிருக்கும் ஒரு ஆவணப்படம் பற்றியது. ஒரு பெண் தனது தேவைகளை தானே முடிவு செய்கிறாள், தன்னைப் பற்றி தானே சிந்திக்கிறாள், தனக்குத் தேவையானவை எவை, தேவையற்றவை எவையென விளக்கமுள்ளவள். தன் அறிவையும், உடலையும் கொண்டாடக் கூடிய தன்மை தனக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய விடுதலையுணர்வை நிர்ணயிப்பதும், குலைப்பதும் தானே- என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஆவணப்படம் ஒன்றினை ஹோமி அடஜானியா செய்திருக்கிறார்.
மக்களுடைய பிரச்சினை, பெண்ணியம் பேசுபவர்கள் மட்டும், எது எண்டுமானாலும் செய்யலாம், ஆயின் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வதும் சரிதானே? பெண்ணியம் என்பது ஒரு முரட்டுப் பிடிவாதமுடைய சமுக சீர்குலைப்பானா?
இது ஒரு நல்ல கேள்வி.
யார் வேண்டுமானாலும் எதுவும் செய்வது என்பது எழுந்தமானமான ஒரு சமுக அமைப்பு. இந்த உலகத்தில் யாரும் யாரையம் கொலை செய்துவிட முயாது. யாரும் யாருடைய தயவின்றி ஒரு உயிரை உருவாக்கி விடவும் முடியாது. பகைவர்களை எல்லாம் அழிக்கவும், நண்பர்களை எல்லாம் தழைக்கவும் வைக்க முடியாது.
ஆணும் பெண்ணும் ஒரு போதும் சரி நிகர் சமனாக முடியாது. அது தான் உண்மை. உயிரியல் வேறுபாடு கொண்டவர்கள் அவர்கள். ஒத்த மனநிலை உடையவர்களும் இல்லை. முற்றிலும் வேறுபாடுகள் கொண்டவர்களாக பல பில்லியன் வருடங்கள் வந்தவர்கள்.. ஆனால் இவ்விரு பால்நிலைகளும் சரிநிகராகக் கூடியவை. பால்நிலையைப் பற்றித்தான் நாங்கள் கதைக்கிறோம். பாலுக்கும், பால்நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் இந்த வீடியோவிற்கு வருவோம். ஒரு பெண் தன்னால் எல்லாமே செய்ய முடியும். திருமண பந்ததிற்கு உட்பட்டும், உட்படாமலும் உறவுநிலையில் இருக்க முடியும் என்று கூறுகிறார். அது சரியா? அது சரிதான், அது எனது தெரிவு என்றும் கூறுகிறார். அப்படியானால், யாரும் என்னவும் செய்யலாமா, அவரவர் தெரிவு என்று கூறிக்கொண்டு?
இந்த உலகம் முழுவதும் ஆண்களால், தாங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் விளக்கங்களும், நீதியும், நியாயங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு பாலியல் தாக்குதல்தாரி, தன்னை நியாயப்படுத்தும், பாதிக்கப்பட்டவர்களை குறை கூறும் உலகமிது.
இந்த உலகத்திற்கு பதிலடி கொடுப்பதே இவ்வாறான திறந்த வாக்குமூலங்களின் பதிவு. எந்தவொரு பெண் நினைத்தாலும் என்னவும் செய்யலாம். ஆண் செய்யக் கூடிய எல்லாவற்றையும் பெண் செய்வதாகச் சொல்லுகிறாள். ஆனால் முன்வைக்கப் படும் கேள்வியோ, பெண் இவற்றைச் செய்தால், ஒரு ஆண் இவற்றைச் செய்யும் போது கேள்விகள் கேட்காதீர்கள் என்பதாக இருக்கிறது.
இந்த ஆவணப்படம் வந்ததன் நோக்கமே, ஆண் ஏலவே இவற்றைச் செய்கிறான், அது போலவே தன்னாலும் செய்ய முடியும் என்பதை அழுத்தமாகச் சொல்லுவதற்காகவே. இதன் பின்னர்தான் ஆண் இவ்வாறானவற்றைச் செய்யப் போகிறான் என்கிறது மாதிரியான அபத்தங்களை முன் வைக்காதீர்கள்.
இருப்பினும், முறைகேடான, சமுகத்தின் ஒட்டுமொத்த பொதுப்புத்தியின் தெரிவில் எடுக்கும் முடிவுகளின் கூட்டுத் தெரிவானது மிகப் பிழையானது. அது யார் எடுப்பினும். எல்லோருக்கும் உறுத்துகிற ஒரு விடயம், திருமணத்திற்கு புறம்பான உறவைப் பெண் பேணுதல் தொடர்பானது. உன்னால் முடியுமாயிருந்தால் என்னாலும் முடியும் என்பது சரி.ஆனால் அனுமதிக்கப்பட்ட, சட்ட ரீதியான ஒரு உறவில் ஒருவரை ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, சமுக ரீதியாகவோ அழுத்தங்களுக்கு உள்ளாக்குதல் குற்றமாகும்.
தெரிவுகள் எப்போதும் நம் சார்ந்தவை அல்ல. எம்மைச் சுற்றியுள்ளவர்களின் தெரிவுகளும் நமதானவையாக இருக்கின்றது. எமக்கேயான தெரிவை ஏற்படுத்தும் போது, ஆரோக்கியமானதொரு சமுக மாற்றம் தேவையாகிறது.
ஆணை அடிபணிய வைப்பதும், ஆணை முடக்குவதுமல்ல எமது தேவை. அப்படியாயின் நாம் தோல்வியடைகிறோம். நம் பற்றிப் புரிய வைப்பதும், அவர்களைப் புரிந்து கொள்வதும் நமது தேவைகளில் முக்கியமானது.
Comments
Post a Comment