Skip to main content

உழுவான் வண்டு

ஜெர்மன் நாட்டுக் கவிஞர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பூராவும் உழுவான் வண்டு (Colfax plowing bee) வளர்த்தல் தொடர்பான கதை. உழுவான் வண்டு செர்மனியில் இருக்கிறதா எண்டு நம்பிறதுக்கு எனக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. உழுவான் வண்டே நாலு குல பேதங்களில் ஆறு வர்ணங்களில் கிடைக்கிறது.

கரச்சான் உழுவான்,நண்டு உழுவான்,பேய் உழுவான்,குதிரைப்பாச்சான் எண்டு நாலு குலங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. சாணிப்பச்சை,அரியதரக் கலர், தவிட்டுக்கலர்,அழுகின விளாம்பழ நிறம், மேலும் சொல்ல முடியாத சில வஸ்துக்களின் நிறம் எண்டு சுமார் எட்டு வகையான நிறங்களில் உழுவான் வண்டு பறந்தும், நடந்தும், ஊர்ந்தும், உழுதுகொண்டும் திரிகிறது. 


உழுவான் வண்டைப்பற்றி இந்த சேர்மன் நாட்டுக் கவிஞர் எழுதியதெல்லாம் உழுவான் வண்டை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது எப்படி என்றே.சேர்மன் மொழி எனக்குத் தெரியாததால், ஆங்கிலத்தின் அதன் ஆறாம் பதிப்பொன்றை கொஞ்சக் காலத்துக்கு முன்பு ஒரு ரயில்ப்பயணத்தில், தண்ணீர்க் கடை ஒன்றில் வாங்கின புத்தகமொன்றில் படித்தேன்.

இதில என்ன விசேடமென்றால் உழுவான் வண்டு ஒன்றைப் பிடிக்கிறதில எனக்கிருக்கிற சிரமமும், உழுவான் வண்டு ஒன்றை வீட்டில் வளர்க்க எனக்கேற்பட்ட ஆர்வமும் ஒன்றுக்கொன்று முரணானது. அரை பெல் வடிவ வரைபில ஆர்வம் பீக் பொயின்றில இருந்தது. பிடிக்கக் கூடிய தகவு பூச்சியத்தில் இருந்தது. 

எது முடியாதோ, எது மறுக்கப்படுதோ அது தானே எனக்கு வேணும். அப்பிடித்தான் உழுவான் வண்டு மீதான காதல் எனக்கு சொல்லாமல்க் கொள்ளாமல் வந்தது. மொழி படத்தில பிருத்திவிராஜுக்கு, சோதிகாவைப் பாத்தோன்ன லைட் பத்தினாப் போல, எனக்கு உழுவான் வண்டு என்ட பேரைக் கேட்டாலே லைட் பத்தத் தொடங்கிட்டு.

உழுவான் ஆசையைப் பற்றி எல்லா நண்பர்களுக்கும் ஒரு மெயில் தட்டினேன். “உழுவான் என்பது”, என்று தொடங்கும் அந்த மெயிலுக்கு எந்த நண்பர்களும் பதிலே அனுப்பவில்லை. சப்ஜெக்டில் உழுவான் என்றிருந்தாலே நேரே றீசைக்கில் பண்ணி விடத்தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் மேலே போய் சிலர் கீ வேர்ட்ஸ் குடுத்து என்னுடைய உழுவான் தொடர்பான மெயிலுகளைத் தடை கூடச் செய்தார்கள். அவையே ஆர்வத்தை இன்னும் கூட்டத் தொடங்கியது.

அது கிடக்கட்டும் என்று, அலுவலகத்தில் இருக்கிற அப்பாவுக்கு, சரியா பின்னேரம் நாலு மணிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவேன். உழுவான் வண்டுகள் மீதான என்னுடைய காதலை விபரித்து. அப்பா, என்னைப் பெற்ற சோகத்தில, பதில் அனுப்புவார்.

குஞ்சு!உழுவான் இங்கனேக்க பிடிக்க முடியாது. அதுக்கு நாங்க ஊர்ப்பக்கம் தான் போகனும். தனும் உழுவான் ஓண்டும் வளர்க்கிற சாமான் இல்ல. கையைக் கிழிச்சுக் கொண்டு போடும். விசச் சாமான். நீ கம்பசில சாப்பிட்டியா? வேலை என்ன மாதிரி. அம்மா தனிய இருக்கிறா; கெதியா வீட்ட போ. பின்னேரம் அண்ணாவுக்கு ஸ்கைப் பண்ணு.

றிகாட்ஸ், அப்பா. 

என்று முடிப்பர். நான் சப்பென்று வரவுப்பெட்டியை மூடிவிட்டு, சொலிடையார் விளையாடுவன். இன்னும் கொஞ்ச நேரத்தில், டேட்டா மைனிங் படிப்பிக்கிற தங்கமேஸ்வரன் சேர் வருவார். 

என்ன அன்பு, பாடம் இல்லியோ எண்டு கேப்பேர், உடன, சேர், உங்களுக்கு உழுவான் வண்டு தெரியுமா? Plowing bee, உடன விக்கி ஆர்டிக்கல் ஒண்டை லிங்க் அனுப்புவன் அவருக்கு. இதை வளக்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் எண்டு கதைய மெல்லப் போடுவன்.

தங்கமேஸ்வரன் சேர் உடன, கறிக்கு வெட்டுற ஆடு, குழம்பில கொதிக்கேக்க கதைக்குமாப் போல ஒரு குரலில, வீட்டிலேயே அன்பு, வளக்க? எண்டு கேட்டு விட்டு, தண்ணி குடிச்சிட்டு வரப்போரதாச் சொல்லி விட்டுக் காணாமல்ப் போவார்.

இப்படியாக, உழுவான் வண்டு தொடர்பான ஆசையும், காதலும் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போனது. உழுவான் வண்டை வளர்க்க முடியாமல்ப் போகும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நினைக்கும் போது, கை விரலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. உழுவான் + அன்புக்கரசி என்று என்டையும், உழுவானுடையதும் பேரை கழிவறையில எழுதி விட்டு வர வேணும் போல ஒரு கழிசடைக் காதல் எனக்கு, உழுவான் வண்டில் பிறந்தது. 

காலிருக்கிற உழுந்து வடை!!! எண்டொரு ஹைக்கூவும் உழுவான் வண்டின் மீது எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் பண்ணினேன். இருப்பினும் உழுவான் மீதான காதல் குறையவே இல்லை. உழுவான் வண்டை வளர்க்க இந்த முறைச் சம்பளத்தோடு தொடங்கியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாய்ச் சபதமேடுத்தேன். 

என்னுடைய மிக நெருங்கின ஐந்து நண்பர்களுக்கு கொன்பரன்ஸ் கோல் போட்டு விடயத்தைச் சொன்னேன்.என்னுடைய தீவிரம் கண்டு அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். எங்கு, எப்படி, என்ன கால நிலையில், என்ன சுவாத்தியத்தில் உழுவானை வளர்க்கலாம் என்று அவர்கள் விக்கி விக்கியாகத் தேடினார்கள். உழுவான் வண்டைப் பற்றி ஏலவே என்னிடம் பெரியதொரு டேட்டா கலெக்ஷன் இருந்தது. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து, நான் உழுவான் வண்டொன்றை வீட்டுக்குள் கொண்டு வரக் கூடிய அந்த உன்னதமான தருணம் வாய்க்கும் நாளும் கிட்டியது. 

நான் அதி தீவிரமாக வேலையில் இறங்கினேன். 

சேர்மன் காரன் எழுதின புத்தமென்பதால் அது சரியாத் தான் இருக்கும். உழுவான் வண்டோன்றை இலகுவாகப் பிடிப்பது எப்படி என்ற பக்கத்தில் இருந்து புத்தகம் தொடங்கி, வண்டுக்கு ட்ரெயினிங் குடுப்பது முதலாக நானூறு பக்கம் இருந்தது. உழுவானை பழக்கி வேலை கூட வாங்கலாமாம். 

என்ன அற்புத மிருகம் இது. சாவல்ச்சண்டை, மஞ்சு விரட்டல், ஸ்பெயினின் புள் பைட், சீனத்தின் சில் வண்டுச்சண்டை இப்படியாக உழுவான் வண்டுக்கும் போட்டி வைக்கலாம். நினைக்கவே இதமாக இருந்தது. 

ராமாயணத்தில, ராமர் வாலியைப் பார்த்து, “வண்டு கொண்டு வா” என்று கேப்பார். அது போல என்னையும் பார்த்து யாராவது கேட்டா, வண்டொன்றைப் பரிசளிக்கலாம் எண்டு கற்பனையும் கட்டி வெச்சிருந்தன். மகாபாரதத்தில் துச்சாதனன் “பெண்டு கொண்டு வா” எண்டு கேக்கிறதைப் போல ஆரும் என்னட்ட கேக்க மாட்டாங்கள் என்ட மனோ தகிரியம் தான்  

வண்டொன்றை இலகுவில பிடிக்க, சிந்தெடிக் ஆயிரம் கண் வலை இரண்டும், பிளாத்திக்கு தானியங்கி மூடி ஒன்றும் தேவைப்படும். இன்னும் அசற்றபோல் என்கிற தனிமக்கூட்டும், மிளகுப் பொடியும் தேவை. உழுவான் வண்டு நல்ல காலம் மாமிச பட்சினியாக இருக்கவில்லை. உழுவான் வண்டுக்கு கொஞ்சம் பசலிக் கீரையும்,பச்சைப் புல்லும் போட்டால்க் காணுமாக இருந்தது.

உழுவான் வண்டுக்கு கூடு கட்டுதல் ஒரு பெரிய கலை. உழுவானுக்கு கூடு கட்டுதலைப் பற்றி தனியாக மொங்கோலியாக் காரன் ஒருத்தனின்ட புத்தகமொன்றை வாங்கிப் படித்தேன். உளான்படோரில் உழுவான் வண்டுகள் அதிகமாம். 

நான், சிரியாவில் வேலை பார்க்கும் என்னுடைய மச்சாள்ப்பெட்டை ஒருத்திக்குச் சொல்லி, ஆய்வு கூடத்தில் வண்டு பிடிக்கும் தானியங்கி பிளாத்திக்கு மூடி ஒன்றை வெஸ்டன் யூனியன் பொருள் டிரான்ஸ்பர் மூலம் தருவித்துக் கொண்டேன். அதற்கு இலங்கைச் சுங்கச் சாவடியில் மூவாயிரத்துச் சொச்சம் ரூவாய் வரியாக அறவிட்டார்கள். சிரியாவில் அது மூனே முக்கால் டொலர் தான் பெறுமதி. இழப்பு முக்கியமில்லை, உழுவான் தான் முக்கியம்.

அப்படியே, ஆயிரம் கண் வலையை, காத்தான் குடியில் இருந்து வாற மரியத்துக்கும், கொழும்புப் பெடியன் ஆரிப்புக்கும் கோர்த்து விட்ட சேவையைச் செய்ததால, மரியம் தண்ட அப்பாவிண்ட மீன் பிடி வலையில இருந்து ஒரு பெரிய துண்டு, 26 க்கு 22 என்ட ரீதியில பிச்சுக் கொண்டு வந்து தந்தாள். நான் தையல்க்கடை அன்ரியிடம் சொல்லி, கம்பி போட்டு வலை தைத்துக் கொண்டேன்.

அசற்றபோல் தனிமக் கூட்டை எடுப்பதொன்றும் லேசான காரியம் இல்லை. ஒருநாள் நேரமொதுக்கி எங்கட பள்ளிக் கூடத்துக்குப் போனன். பெரிய உபாத்தியாயரைச் சந்திச்சன். பிறகு இரசாயனவியல் ஆசிரியரைச் சந்திச்சு விட்ட கதை, தொட்ட கதை, கம்பஸ் வாழ்க்கை, இடைக்கிட நீங்கள் தான் எங்களைப் படிப்பிச்சு விட்டனியல் எண்டு நன்னாங்கு வசனத்துக்கு ஒவ்வொருக்காச் சொல்லி, எல்லாம் கதைச்சு முடிச்சு, ஒரு மாதிரி ஆய்வு கூடத்துக்குப் போய், “அது ரெண்டையும்”, சும்மா சுத்திப் பாக்கிற சாட்டில பொலித்தீன் பைக்குள்ள போட்டுட்டன். கம்பஸ் கண்றீனில ரோல்ஸ் வாங்கிக் கொண்டு,ஆளை முந்தி ஓடியார பழக்கத்தில, தனிமங்களை எடுத்தன். ஓடினன். கலந்தன், மூக்கைத் துளைக்கிற நாற்றத்தோடு வந்த அசற்றபோலை தயாரிச்சன். கதை முடிஞ்சு. 

உழுவான் வண்டுகளை வீட்டில் வளர்த்துக் கொண்டு வரும் போது, ஆண் ஓன்றும், பெண் ஒன்றுமாக வளர்க்க வேண்டும், அவை குஞ்சு பொரிக்கும். அக்குஞ்சுகள் இன்னும் சில குஞ்சுகள் பொரிக்கும், அக்குஞ்சுகளும் குஞ்சுகளைப் பொரிக்கும்...ஒரு சில காலத்தில் என்னிடம் உழுவான் பண்ணையொன்று உருவாகும். நினைக்கவே உள்ளூறப் புளகாங்கிதமாகக் கிடந்தது. உழுவான் பண்ணையும், அன்புக்கரசியும் எண்டு யாராவது பேட்டி எடுக்க வருவினம்+-989km n. பேட்டி எடுக்கும் போது, மஞ்சள் நிற பிளவுசும், கருப்பில, பச்சைக் கோடு போட்ட சாரியும் தான் கட்டுவன் எண்டு மனதுக்குள் தீர்மானம் பண்ணினேன். பண்ணை வரும் காலத்தில, கருப்பில பச்சைக் கோடு போட்ட சாரி பழசாப் போய் விடும். அதால இப்ப இருந்தே அந்தச் சாரியைப் பத்திரப்படுத்த விரும்பினன். 

உழுவானை எப்பிடிக் கூப்பிடுறது? குஞ்சு! அல்லது குட்டியா! எண்டு செல்லமாய்க் கூப்பிடவேனும். இப்பிடியும் பிளான் எல்லாம் பக்காவாய்ப் போட்டாச்சு. 

எனக்கெண்டு மண் நிறத்தில உழுவான் வண்டொன்று, சுறுசுறுப்பான கால்களில் மண்ணை உளுத்துக் கொட்டிக் கொண்டு வீரியமாக ஓடிப் போய் வளைக்குள் பதுங்கிற காட்சி இருநூறு நாள் என்னுடைய அகத்திரையில வெற்றிகரமா ஓடிச்சு. 

உழுவான் குட்டிகளுக்கு பச்சைக் கீரைகளை வீட்டில, தோட்டத்தில பிடுங்கலாம். உழுவானுக்குக் கூடு கட்டுறது ஒண்டும் லேசான விஷயமில்ல. அங்க தான் பிரச்சினை. உழுவானுக்கு களி மண்ணில அரிக்கன்சட்டி மாதிரிக் கோடுகள் போட்ட உட்குவிந்த ஓட்டையும், உட்குழிவான பரப்பையும் உடைய கூடொன்றை கட்ட வேண்டும். சரியாச் சொல்லப் போனால், வளை ஒன்றை வனைய வேண்டும். ஆனா அந்த வளை சொர சொரப்பா இருக்கக் கூடாது. மிக மிருதுவா வனைஞ்ச பானை போல இருக்கோணும். 

மண்ணால பாணை வனையிற ஆக்களிட்டச் சொல்லித் தான் இதனைச் செய்ய முடியும் என்று விளங்கினது. மண் பானை வனையிறதைப் பற்றி யோசிக்கும் போது தான் அது தோன்றினது!!!

உழுவான் வண்டுக்கு கூடு கட்டத் தேவையான பொருளில் இருந்து தான் இந்தக் கதை தொடங்குகிறது. 

ஒரு ஊரில அன்புக்கரசி, அறிவுக்கரசி என்று இரண்டு நண்பிகள் இருந்து வந்தீச்சினம். அன்புக்கரசி கரைசல் எண்டா, அறிவுக்கரசி கரையம் மாதிரி! அவ்வளவு ஒட்டு. அறிவுக்கரசியிண்ட அப்பா ஒரு குயவன். பானை வனைபவர். குட்டிக் குட்டியா பானை, சட்டி, முட்டி,அண்டா, குண்டா,கொசவம்,குண்டாளம்,முண்டாளம் இதெல்லாம் மண்ணில் செய்து விப்பேர். தண்டவாளம் மட்டும் செயிறேல்ல. 

அன்புக்கரசி, வீட்ட போகேக்க எல்லாம், அறிவுக்கரசியிண்ட அப்பா, குட்டிக் குட்டியா, சட்டி பானை செய்து குடுப்பேர், அவள் சோறு கறியாக்கி விளையாட. அவ்வளவு ஒண்டுக்க ஒன்றான விக்கிரமன் படம் மாதிரியான குடும்பம் அது. 

ஒரு நாள், நடுச்சாமம் பன்னெண்டே காலுக்கு அறிவுக்கரசியிண்ட அப்பாவுக்கு அன்புக்கரசியாகின நான் தொலை பேசி, அங்கிள், உங்கட வீட்டு சட்டி குட்டி போடுமா எண்டு, நித்திரைத் தியரில் இருந்த அங்கிளிடம் கேட்டன். அரண்டு போன அங்கிளுக்கு அண்டு இரவு தான் அறிவுக்கரசன் பிறந்தான். அதாவது அங்கிளே குட்டி போட்டுட்டேர். 

இதில ரெண்டு விடயம் தெளிவாகிறது.1. ஒண்டு அவ்வளவு ஏழைப்பட்ட வீட்டிலும் தொலைபேசி இருக்கிறது எண்டுறது.2. அடுத்தது, எங்களுக்குள் இருக்கிற அன்னியோன்னியம். 

அந்த சட்டி குட்டி போட்ட கதைக்குப் பிறகு அறிவுக்கரசிக்கும் அன்புக்கரசிக்கும் ஒரு பெரிய பாலம் வந்திருந்தது. அதுக்குப் பேர் உறவு வீழ்ச்சிப் பாலம். தம்பிப் பாப்பா வந்தோன்ன அறிவுக்கரசி, அன்புக்கரசியிண்ட தோழமை அசுமாத்தமாகி விட்டது. அறிவுக்கரசி அறிவுக்கரசனோடையே நேரத்தை செலவிடத்தொடங்கினாள். 

பிறகு அன்புக்கரசியாகிய நான் ஊர் மாற்றலாகி, குசவன் புட்டியில இருந்து வந்துட்டன்.அதுக்குப் பிறகு அன்புக்கரசிக்கும், அறிவுக்கரசிக்குமான தொடர்பு முற்றாகவே துண்டி பட்டுப் போச்சு.அறிவு, அறிவு எண்டு வாற மாதிரியான அழகான பேர்களை அறிவிண்ட அப்பா பிள்ளையளுக்கு வெச்சதை இட்டு எனக்குச் சரியான சந்தோசம். 

இருந்தாலும் நான் அடிக்கடிச் சொல்லுவன், அங்கிள், இந்த “அறிவு” வராத பேர்களை உங்கண்ட பேரப் பிள்ளையளுக்கு வையுங்கோ எண்டு . எட்டொம்பது வயசியலையும் எனக்கு என்ன விஷய ஞானமெண்டு, அப்ப பாருங்களன்!

இப்ப வளையின் தேவை வர, முதலில ஞாபகமா வந்தவர் அறிவுக்கரசியிண்ட அப்பா எண்டது உங்களுக்கு கிளியராகி இருக்கும். 

எது எப்பிடி நடந்தாலும், வண்டும், உழுவான் வளர்ப்பும் எனக்கு மிக முக்கியம். ஆருக்காகவும் உழுவானை விட்டுக் குடுக்க முடியாது. ஆகவே உழுவான் தேடி, உழுவானுக்கு வீடு தேடி ஊருக்குப் போறதா முடிவு செய்தன். 

உழுவான் குஞ்சுகளை எப்பிடிப் பிடிக்கிறதெண்டுறதுக்கான பயிற்ச்சிப் புத்தகங்களை இணையத்தில் டவுன் லோட்டி வைத்திருந்தேன். செய்முறை கொஞ்சம் கஷ்டம் தான். வயல் வெளிகளில், அல்லது சேனைப்பயிர் செய்து, இரண்டாம் போகத்துக்கு பயிரை எரித்த இடங்களில் இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி தோண்ட வேண்டும். மணல் மண் கலப்பற்ற, கபுக்கு அற்றதாக இருக்க வேண்டும். வண்டல் மண்ணாக இருந்தால் லாபம். 

உழுவான் பிடிக்க உகந்த காலம்;பங்குனி சித்திரை மற்றும் ஆவணி, அதுக்கடுத்த தமிழ் மாசப் பேர் மறந்திட்டுது. ஆகஸ்ட், செம்தெம்பர், தென் மேற்கு பருவ மழையில பயிர் விளையிற காலங்களே ஆகும். இப்பிடியான பருவ காலங்களில், தோண்டிய குழிக்குள், வறுத்த மஞ்சள்த் தூள், உமிக்கரி, சுடுசாம்பல், வேப்பமிலை, இடிச்சு எண்ணை நீக்கின ஆமணக்கு விதை இவற்றைத் தூவ வேண்டும். 

இதெல்லாம் சேர்மன் காரனுக்கு அத்துப்படியாகினதை வியக்கத் தான் எனக்கு இரண்டு வருஷங்கள் ஓடிப்போனது. 

தூவின அந்தக் கூட்டுக்குள்ள, நல்ல தண்ணியை மெது மெதுவா ஊத்திக் கொண்டே இருக்க, மண்ணின் சந்து பொந்துகளுக்குள் இருந்து உழுவான் குஞ்சுகள் வெளிவந்து அந்தக் கரைசலில் மிதக்கும். மிதக்கிற குஞ்சுகள் வெள்ளை, பழுப்பு நிறங்களில் கொம்பு, முனைப்பு இல்லாமல் இருக்கும். இவை விஷம் நிறைந்தவை. இவற்றைப் பிடிக்க வலை, பிளாத்திக்கு தானியங்கி மூடி, கை கிளவுஸ், இரசாயனத் தனிமக் கூட்டு போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். பிடிச்சதும் ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ள போட்டு, கீரை வகைகளை உண்ணக் கொடுக்க வேண்டும். 

உழுவான் வண்டுகளின் தனி இயல்பு, மண்ணுக்குள்ள சுவாசிக்கிற இயல்பே! அதே போல, காற்றின்றி சில காலம் வாழவும் கூடியன. இப்பிடியெல்லாம் சிறப்பு வாய்ந்த உழுவானைக் கொண்டாடாம இருக்க முடியுமா? 

உழுவான் பிடிக்க என்னுடைய பயணம், கொழும்பில இருந்து, யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி விரைவு வண்டியோட தொடங்கீச்சு. முதலில அறிவுக்கரசியைத் தேடிப்பிடிச்சு, அப்பங்காரனிட்டச் சொல்லி ஒரு வளை, ஊரில சில பொருட்களைச் சேர்த்து, சின்ன மாமாண்ட வயலுக்க குழி தோண்டி உழுவான் பிடிக்கோணும். பிறகு அதை பவுத்திரமாக ட்ரெயின் பிடிச்சு கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு வரோணும். இடையில உழுவானுக்கு பயணக் களைப்போ, என்னால உபத்திரவமோ இருக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன். 

என்னுடைய ஆசை, விருப்பம், தேவை எல்லாமுமே உழுவானகவே இருந்தது. நான் சுதந்திரமானவளாக உணருவதற்கு உழுவான் வண்டொன்று தேவையாக இருந்தது. உழுவான் வண்டு வளர்த்தல் எவ்வளவு பெரிய அழகியல் விஷயம்! எனக்குத் தான் எவ்வளவு பெரிய அழகுணர்ச்சி இருக்கு! என்னைப் போல யாருக்கும் இப்பிடி அழகியல் எண்ணம் உண்டாகுமோ?!!!

ஊருக்கு வந்து சேர்ந்த அந்த அதிகாலையில், சின்ன மாமாவிடம் சொல்லாமல்க் கொள்ளாமல், அறிவுக்கரசி வீட்டைத் தேடி குசவன் புட்டிக்கு ஓடினேன். இப்போது குசவன் புட்டி ஒரு சின்ன மேடாக வளர்ந்து, அதில் கொஞ்சம் புற்களும் காடு மடிக் கிடந்தது. கீழே இருந்த குளம் தூர்ந்து போய், அந்த இடத்தில் ஒரு பலசரக்குக் கடையும், சின்ன சைக்கிள் கராஜ் உம் முளைத்திருந்தது.

அறிவுக்கரசியின் வீடு அதே இடத்தில தான்.வீட்டுக்குள்ள போனதும், அறிவிண்ட அப்பாவைக் கண்டன். மனிசன் வாலில்லாக் குரங்கு மாதிரி நல்லா வயக்கெட்டுப் போனார். வீட்டுச் சுவரின் ராக்கை முழுக்க பானையும், சட்டியியுமாக இருந்தது. அப்ப போலவே எழைப்பட்டவர்களாகவே இப்பையும் இருந்தனர்.

வந்த வேலை முடிஞ்சிரும் எண்டு மனச்சுக்குள்ள ஒரு கதன குதூகலம். அறிவுக்கு கலியாணமாகி இரண்டு மகன் மார் இருக்கிறார்களாம் என்று அறிந்தேன். அறிவின் புருஷன் ரண்டு மகன்மாரையும், பொஞ்சாதியையும் விட்டு விட்டு ஓடிவிட்டதாக ஊருக்குள் கதைத்தார்கள். அறிவின் அப்பா சொன்னார், அறிவின் ‘அவர்’, நோய்வாய்ப்பட்டு இறந்து போனதாக. நான் இரண்டாவதே உமையாக இருக்கவேண்டுமெண்டு நினைத்துக் கொண்டேன். நான் அங்கு வந்ததும், என்னுடைய இப்போதைய நிலை குறித்தும் அவர்களுக்கு சொல்ல முடியாத புளகாங்கிதம். மேலும் அறிவின் தம்பி அறிவு, அறிவே இல்லாமல் ஊர் சுத்துகிறான் என்றும் அவர் சொன்னார். 

அங்கிள்....“உழுவான் வண்டை வளர்க்க ஆசைப்படுறன்”இப்பிடித் தான் முதலாவது வாக்கியத்தைத் தொடங்கினன்.அறிவுக்கரசியிண்ட அப்பாவின் முகத்தில சொல்ல முடியாத பிரகாசமும், நன்றி உணர்வும். 

அறிவின் அப்பா, பதிலுக்கு,கொஞ்சம் யோசித்து விட்டு, “எங்களுக்கும் கேக்கச் சந்தோசம் என்றார். நான் உழுவான் வண்டு வளர்க்க ஆசைப்பட்டதில், முதன் முதலாக மனசாரச் சந்தோசப்பட்ட ஒரே நபர் அவராய்த் தான் இருக்க முடியும். என்னுடைய எதிர்கால உழுவான் பண்ணையில் அவருக்கு வேலை போட்டுக் குடுக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தேன். 

அங்கிள், அதுக்கு உங்கட சின்ன ஒத்துழைப்பொண்டு வேணும்....

மறுபடியும், அறிவிண்ட அப்பா கண்கலங்கினாப் போல, தாராளமா என்டேர். பிறகு என்னைக் கதைக்கவே விடேல்ல. நான் வந்த காரியத்தை முழுசாச் சொல்லவே விடேல்ல. என்னை தெய்வம் போல உபசரிக்கத் தொடங்கி விட்ட்டர். எனக்கு சும்மாவே புகழ்ச்சி பிடிக்காதெண்டதால, அந்த உபசரிப்பில கொஞ்சம் புளித்துப் போய்ட்டன். புளிச்சுப் போனதில் கேக்க வந்ததைக் கேக்கவும், சொல்ல வந்ததைச் சொல்லவும் மறந்திட்டன். 

நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சதாயும், கேக்க வந்ததைக் கேட்டு முடிச்சதாயும் அறிவின் அப்பா உணர்ச்சி வசப்பட்ட முகத்தோடு தீர்மானிச்சுக் கொண்டேர்.

மகள் நீ போயிட்டு வா...எப்ப, எந்த ரெயினில திரும்பப் போற? ஒண்டும் கவலைப்படாத, நான் எல்லாமும் செய்து, ஒழுங்கு படுத்தித் தாரன். நீ தாராளமா வளக்கலாம். நான் உனக்கு ஒத்துழைக்கிறன். ஆனா ஒண்டு அறிவுக்கரசிக்கு மட்டும் தெரியக் கூடா எண்டேர். 

எனக்கொண்டும் அறிவுக்கரசியில பழைய நட்பு இல்லை எண்டதாலும், எனக்கு நட்புக் கொண்டாடுறதை விட உழுவான் வண்டே முக்கியம் என்றதாலும், சரி அங்கிள் எண்டு அவரது கையைப் பிடிச்சு ஒரு ஒப்புக்கு நன்றி சொன்னேன். 

அப்ப நீ போயிட்டு வா ராசாத்தி, நான் உன்னை உழுவான் வண்டோட, ரயினில சந்திக்கிறன்.ஒரு பிரச்சினையுமில்லாம முற்றாக்கலாம் எண்டுஞ்ச் சொன்னேர்.

ஒரு பிரச்சினையும் இல்லாம எண்டேக்கையே எனக்கு சாதுவாச் சந்தேகம் வந்திருக்க வேணும். சரி, ஏழைப்பட்ட, கிராமத்து எளிய மக்கள். இயல்பாய் இருக்குங்கள் எண்டுட்டு, ஓம் எண்டும் தலையாட்டிட்டு, ரயிலுக்குப் போற நேரமும் குறிச்சுக் குடுத்திட்டு வீட்ட மீண்டிட்டன்.

ரண்டு நாள்க் கழிச்சு, இண்டைக்கு காலமை ஐஞ்சே முக்காலுக்கு கொழும்புக்கு வீட்ட வர ரயிலேறி, அறிவிண்ட அப்பாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தன். 

மனுஷன் எப்பிடியும் உழுவான் வண்டைப் பிடிச்சுக் கொண்டு வந்திரும். வண்டு பிடிக்கிற வேலையும் சுலபமாச்சு. வளையும் கிடைச்சிரும். ச்சா!!! கிராமத்து மனிசர் தங்கமான சீவன்கள். என்ட உழுவான் பண்ணை ஆசை! 

கொழும்பிலையும் இருக்குதுகளே, உதவி அறியாத நாயள். இதுகள் எல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கேக்க, அறிவின் அப்பா அவ்விடம் வந்து  நிண்டேர்.

சினிமாப் படத்தில கிளைமாக்சில, அப்பன் காரன் மகளை ஹீரோவோட சேர்த்து வைக்க வியர்த்துப் போய் வாற மாதிரி ஒரு பொசிசனில தான் அறிவின்ற அப்பா இப்ப நிக்கிறேர்.

நான் சாருக்கான் மாதிரி கீழ, இறங்கியும் இறங்காமலும் ஒரு காலை வெளிய விட்டுக் கொண்டு, கோச்சுவின் படலையைப் பிடிச்சுக் கொண்டு நிண்டு, கண்ணால ‘எங்க பொருள்’ எண்ட மாதிரிக் கேக்கிறன். என்ட கண்ணில அவசரமும், ஆவலும். 

அவர் மெல்ல, தனக்குப் பின்னால மறைஞ்சு நின்ற இரண்டு ஜீவன்களை வலக் கையாளும், இடக்கையாலும் தோளைப் பற்றி தனக்கு முன்னே இழுத்தார்.

நாலு வயசில ஒரு பெடியனும், ஆறு வயசில இன்னொரு பெடியனுமாக இரண்டு அரைக்காச்சட்டை தலைமயிர் வெட்டிக் கொள்ளாத பெடியங்கள்!!! 

அறிவின் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தினேர்; மூத்தவன், உழுவான். சின்னன் வண்டு. தேப்பனில்லாப் பிள்ளையளை வளர்க்க விரும்பி, வீடு தேடி, பழைய சிநேகிதத்தை நினைப்பில வெச்சுக்......கண் கலங்கி....கையைப் பிடிச்சு....சாரத்தைத் தூக்கி, கண்ணைனைத் துடைச்சு..... 

உஷ்ஸ்....இதுக்கு மேல வார டயலாக் எல்லாமெ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..... 

வேற என்ன, அடுத்த சீனில, 

உழுவானையும், வண்டையும் கையில பிடிச்சுக் கூட்டிக் கொண்டு ரெயினில ஏறினன். உழுவான் தனக்கு முழு சீட்டு வேனுமேண்டுட்டான். வண்டு மடியில இருக்க ஒப்புக் கொண்டான்.

அறிவிண்ட அப்பா ஓடி வந்து ரயினில, ஆண்டிக் கிளைமேக்ஸ் வில்லனைப் போல ஏறி, ஒரு கெஸ்ட் ரோல் நடிகரைப் போல, இது பிள்ளையளுக்கு எடுத்து வெச்ச பிறப்பத்தாட்சிப் பத்திரம்....ஸ்கூலில சேர்க்க தேவைப்படும்....மறந்திட்டன்....எண்டு என்ற கையில திணிச்சேர்.

பிறகு மழ மழவெண்டு குழந்தைகளை உச்சி முகர்ந்து விட்டு, என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தர். தொடர்ந்து நடக்க முடியாமல் படி வந்த இடத்தில் இறங்கிக் கொண்டார். பின் திரும்பிப் பார்க்காமல் ஊருக்குள் நடந்தார். 

வண்டி வேகமெடுத்தது. 

***
நிலா- 

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி