Skip to main content

Abandoned - Dead Leaves



 


கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு  இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :)

இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச்  சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய  Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன்.

முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும்,
சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான  டேட் ஹியூக்சை மணந்தார்.  உளச் சோர்வினால்  நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும் தற்கொலை குறித்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. பிளாத் முக்கியமாக அவரது கவிதைகளுக்காக அறியப்பட்டவர்;இறப்புக்குப் பின்னர்  புலிட்சர் பரிசு  பெற்ற முதல் கவிஞர்/ முதல் பெண் கவிஞர்  பிளாத். மற்றும் தடுமாற்றம் நிறைந்த கவிஞர்களில் முதன்மையானவராக பிளாத் குறிப்பிடப்படுகிறார். இது அவர் பற்றிய சிறு அறிமுகம். (Wiki )

இனிக் கவிதை,

Resolve


Day of mist: day of tarnish

with hands
unserviceable, I wait
for the milk van

the one-eared cat
laps its gray paw

and the coal fire burns

outside, the little hedge leaves are
become quite yellow
a milk-film blurs
the empty bottles on the windowsill

no glory descends !

two water drops poise
on the arched green
stem of my neighbor’s rose bush

o bent bow of thorns

the cat unsheathes its claws
the world turns

today
today I will not
disenchant my twelve black-gowned examiners
or bunch my fist
in the wind’s sneer.

– Sylvia Plath, 1955.


 உறுதியேற்பு !
 -சில்வியா பிளாத்.


மூடுபனியின்,
ஒளி மங்கிய நாள்
சேவையற்ற கரங்களுடன்
பால்வண்டிக்காக காத்திருக்கிறேன்.

சாம்பல்ப்பாதத்தை விரித்துப் படுத்திருக்கிறது
ஒரு ஒற்றைக்காதுப்பூனை

நிலக்கரி நெருப்பு  எரிகிறது
வெளியே ,
சிறு ஹச்சு இலைகள்
கொஞ்ச மஞ்சளாய்ப் பழுத்திருக்கின்றன.

பலகணி மேடையில் இருக்கும்
வெற்றுப் போத்தல்களை
பாலின் நிறம்  மங்கிப்போக வைத்திருக்கிறது.

பிறிதொருவரின்
ரோசாப்பற்றையில் , வளர்ந்த
வில்போன்ற பச்சைத் தண்டில்,
விழாமலேயே நீர்த்துளி இருக்கும் !(ஆதலால் )
எந்த மகோன்னதமும் இறங்கவேயில்லை !

பூனை, தன் நகங்களை உறையுருவுகிறது!
இன்று,
உலகம் திரும்பிப் பார்க்கிறது.

இன்று நான்,
ஏளனச் சுழல்க்காற்றுக்குள் என் முஷ்டி மடக்கி
கறுப்புக் கோட்டு அணிந்த பன்னிரு
மருள் நீக்கியர்களை
வசீகரிக்காமல் விடுவதேயில்லை.


பிளாத்துக்கு  மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சமயம் அவர் எழுதிய கவிதை இது. அவவுக்கு மன நிலை ஏன் பாதிக்கப்பட்டது  என்றதுக்கு பல காரணம் சொல்லப்பட்டாலும், அவருடைய  துணைவர் அவவை விட்டுட்டு இன்னொரு பெண்ணோட  உறவு முறையில் இருந்தமையே அவர் பல கவிதைகளில் ஆதாரமாகச் சொல்லுகிறார். அவர்களுடைய முதலாவது திருமண ரத்துக்கான, விவாகரத்துக்கான வழக்குப் பதிவை டேட் ஹியூஸ் பதிசெய்துவிட்டு வந்த அடுத்த நாள்க் காலையில் இந்தக் கவிதையை பிளாத் எழுதுகிறார்.

பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதைப்பாணியை (Confessional poetry) முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது, இதுவும் அவ்வாறானதொரு பாணிக் கவிதையே !பொதுவா இந்தக் கவிதையை விளங்காத கவிதைகள் வகையராக்குள்ள தான் எங்கட ஆக்கள் வைப்பினம், ஒரு விளங்காத கவிதையைப் பற்றிய நயப்பைச் செய்யோணும் எண்டது என்னுடைய அவா !

இது ஒரு உளவியல்க் கவிதை.கவிதைகளை எப்பிடி விளங்கிக் கொள்ளுவது, மெல்ல மெல்ல அவற்றை தடவிக் குடுத்து, அவையோடையே பயணிக்கோணும், கவிதைகள் அன்றாடம் நாம் பாக்கிற புதுப் புது மனிதர்கள் மாதிரி... :)

எப்பயுமே சாவைப்பற்றிக் கொண்டாடும் ஒரு பெண்ணாக இருந்த பிளாத், இந்தக் கவிதையில் உலகம் தன்னைத் திரும்பிப் பார்ப்பதைப்பற்றியும் ,காத்திருத்தலைப் பற்றியும், தான் இனிச் செய்யப் போகிற செயலைப் பற்றியும் தெளிவாச் சொல்லுறா. இது எத்தகையது எண்டால் , கடைசி நம்பிக்கையும் அறுந்து  ஒரு நூல் இழையில  ஊசலாடும்....கையறு நிலை ...வெள்ளம் தலைக்கு மேல போயிரும்...தொங்கிக் கொண்டிருக்கேக்க, நான் எப்பிடியும் வாழ்ந்திடுவன்...எங்கையாவது ஒரு இடத்தில எனக்கான மந்திரக் கோல் கிடைச்சிடும் ..சின்ன ஒரு சந்து கிடைச்சு...எல்லாம் சரியாகீரும்...எண்டு எங்களுக்கெல்லாம் தோணுற அந்த  கடைசி வாழ்தலுக்கான ஆசை..அவா... எப்பிடியும் எனக்கானது சரியாத் தான் நடக்கும் என்கிற குருட்டு அதைரியம்...அல்லது நம்பிக்கை. அதான் இந்தக் கவிதை.  இப்பிடிக் கடைசி கடைசியாத் தோனுகிற நம்பிக்கைகள் தருகிற தைரியம் அளவுக்கதிகமானது. அபண்டன் எண்டு சொல்லுவம். ஒரேயடியா,அடிச்சுப் போட்ட மாதிரி ஏராளமான நம்பிக்கைப் பொதியைக் கையில கொண்டுவந்து தந்து ஆசைகாட்டி போட்டு, அப்பிடியே கலைஞ்சு போயிரும்...அந்த மாதிரியான ஒரு மனநிலையில எழுதின கவிதை தான் இது.

உறுதி ஏற்பு,  தன்னுடைய கையாலாகாத தனத்தையெல்லாம் ஒன்று சேர்த்துத் திரட்டி அதுக்கு  உறுதி ஏற்பு எண்டு பெயர் வெச்சிருக்கிறா.

என்ன கொடுமைஎண்டா.....நாளைக்குக் காலமை அவவுக்கு மிக விருப்பமான, அவவிண்ட நேசத்துக்குரிய வாழ்க்கைத் துணைவரை விட்டுப் பிரிஞ்சிரோனும் என்ட வழக்குத் தாக்குதல் கோட்டில வரப்போகுது.... அவவுண்ட விருப்பத்துக்குரிய வாழ்க்கை அப்பிடியே போகப் போகுது..
அந்த நேரம் பார்த்து ஏற்கனவே ஏராளமான தற்கொலை முயற்சித்து வாழ்தலுக்கான தேவையை நிராகரிக்கக் கூடிய தெம்பு கொண்ட   பிளாத்துக்க்கு, வாழோணும் என்ட அவா வரூது. வாழ்ந்தே ஆகோணும் என்ட ஆசை வந்திட்டுது.

அவ சொல்லுவா...
//மூடுபனியின்,
ஒளி மங்கிய நாள்
சேவையற்ற கரங்களுடன்
பால்வண்டிக்காக காத்திருக்கிறேன்.//

இப்பிடிச் சும்மா கையை வெச்சுக் கொண்டு எங்களுக்கெல்லாம் கொஞ்ச நேரம் இருக்க முடியாது. ஒண்டுக்கும் லாயக்கற்ற கைகளுடன்...செய்யிறத்துக்கு   ஆயிரம் இருக்குது...ஆனா கையறுந்து போன நிலை..இனி ஒண்டுமும் செய்ய ஏலாது......
எங்களுக்குச் சில நாள் வாறது முன் கூட்டியே தெரியும். விடிஞ்சோன்னையே இண்டைக்கு எதோ நடக்கப் போகுது எண்டு ஒரு எச்சரிக்கை உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரியான ஒரு ஒளிமக்கிப் போன நாள்லில எதோ அததுக்கு பால்வண்டிக்காகக் காத்திருந்திருக்கிறா  ... இந்தச் செயல் எங்களில எத்தினை பேருக்கு நடந்திருக்கு.... இப்பிடிக் காரணமே இல்லாம நிகழ்த்துகிற காரியங்கள்....இதுக்கு மேலையும் இந்தக் கவிதை விளங்காம இருக்குமா ?

இந்த மாதிரியான மன நிலையில தான், அச்சொட்டா....
தான் ஒரு கையாலாகாத ஆள் மாதிரியும், தன்னைச் சூழ உள்ள எல்லாருமே பீதாம்பரம் போர்த்தப்பட்ட சகலமும் கைவரப் பெற்றவர்களாத் தோணுவினம். இது ஒரு வகை Inferiority complex .Superiority  என்றும் சொல்லலாம். ஆனாக் கொம்ப்ளெக்ஸ்.

//பிறிதொருவரின்
ரோசாப்பற்றையில் , வளர்ந்த
வில்போன்ற பச்சைத் தண்டில்,
விழாமலேயே நீர்த்துளி இருக்கும் !(ஆதலால் )
எந்த மகோன்னதமும் இறங்கவேயில்லை !//

தங்களிட்ட  பூக்கள் பூக்காது, அழகியல் இருக்காதும், இயற்கையின் வனப்பு இருக்காது, இந்த மாதிரியான சுய கழிவிரக்கத்தை உணரத் தொடங்குகிற காலத்தை வடிவாச் சொல்லுறா, பிரிதொருவரிண்ட  ரோசாப்பற்றையில் நீர்த்துளி விழாமலேயே இருக்குமாம்.ஆயினும், தன்னில எந்தக் குறையையும் காட்டிவிட விரும்பாத மன நிலை, இப்பிடி எது நடந்தாலும் தனக்கான எந்த மகோன்னதமும் வானத்தில இருந்து, தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதைப் போல இறங்கி வரேல்ல என்ற ஆதங்கத்தைச்  சொல்லுறார்.

பூனைகளை ஒரு வித அம்மானுஷ்யத்துடன் மேற்குலகத்தார் பாக்கிறதும், ஏன் கீழைத் தேயக் கதைகளையும்  அது இருக்கு. ஆனா அமெரிக்கக் கதைகளில  வார  அம்மானுஷ்யப்  பூனைகளுடன் ஒப்பிடேக்க இங்க குறைவு. அமெரிக்கர்களின் எல்லா அம்மனுஷ்யத்துடனும் பூனைக்கும் ஒரு பங்கு கட்டாயம் இருக்கும். இங்க ஒற்றைக் காதுப் பூனைஎன்று தன்னைத் தான் சொல்லுறா. நிகழ்தகவு பொய்த்துப் போன, மனநிலை பேதலித்துப் போன அவவை இது குறிக்கும், இது எப்ப தெளிவாகுது எண்டால்,

//பூனை, தன் நகங்களை உறையுருவுகிறது!
இன்று,
உலகம் திரும்பிப் பார்க்கிறது//

அவ எதோ ஒரு முடிவை எடுத்திட்டா...உறுதியேற்பு  செய்திட்டா...உலகம் தன்னையே உற்றுப் பாக்கிறதை உணருறா ...அப்ப இதச் சொல்லுறா..அப்ப தான் இன்னொண்டும் சொல்லுறா...

//இன்று நான்,
ஏளனச் சுழல்க்காற்றுக்குள் என் முஷ்டி மடக்கி
கறுப்புக் கோட்டு அணிந்த பன்னிரு
மருள் நீக்கியர்களை
வசீகரிக்காமல் விடுவதேயில்லை.//

உலகம்  தன்னைச்  உற்றுப் பார்க்கேக்க ஏளனமான  சுழலக் காற்று சுற்றி அடிக்குது. கோட்டில வழக்குக் கேக்க வந்திருக்கிற பன்னிரண்டு ஜூரி  மார்கள்....
//இன்று நான்,
ஏளனச் சுழல்க்காற்றுக்குள் என் முஷ்டி மடக்கி
கறுப்புக் கோட்டு அணிந்த பன்னிரு
மருள் நீக்கியர்களை
வசீகரிக்காமல் விடுவதேயில்லை.//

மருள் நீக்கியர்கள் !
தன்னுடைய தீதான வாழ்க்கையினுடைய பக்கங்களை அவர்கள் நீக்குவார்கள் என்று நம்புறா....அவர்களை எப்பிடியாவது வசீகரிப்பதன் மூலம் தனக்கான அந்த இறுதி மந்திரக் கோல் எங்கிருந்தாவது கிடைக்கும் என்று நம்புறா...சின்ன நப்பாசை.

தன்நில ஒரு பச்சாதபம்..ஒரு இரக்கம் ஏற்பட்டாலாவது, தன்னுடைய விருப்பத்துக்குரிய வாழ்க்கை திரும்பவும் வராதா எண்டு நினைக்கிறா.

இவ்வளவு நேரமும் உறுதி ஏற்பு என்று ஒரு பலமான பொம்புளையைப் போலக் , தழல் வீராங்கனையைப் போல கதைச்சுக் கொண்டிருந்த ஆள் , கடைசியில பாவவ மன்னிப்பொன்றுக்குத் தயாராவதைப் போல தன்னையே குறுக்கிக் கொள்ளுறா ….


இது சில்வியா பிளாத்தினுடைய உண்மையான வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கவிதை.
இந்தக் கவிதையை நயக்கிறது என்றதை விட, அனுபவிக்கிறது தான்சாலப் பொருத்தம். நான் அனுபவிச்ச விதம் இது தான்...
ஒவ்வொன்றையும் என்னுடைய அன்றாடத்தோட முடிச்சுப் போட்டுப் பார்க்கிற கம்பாரிச உத்தி முறை.

இதெல்லாம் முடியேக்க உங்களுக்கெல்லாம் என்ன தோணுதோ தெரியேல்ல எனக்குத் திரும்பத் திரும்ப எதிரோலிக்கிரதெல்லாம் பிளாத்தினுடைய,
''ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்” என்கிற வாக்கியமே. வார்த்தகளால  விபரிக்க முடியாத ஒரு நெருக்கமான உறன்வையும், சொல்லமுடியாத ஒரு எச்சரிக்கை உணர்வையும்  பிளாத்துடன் இணைந்து உணருகிறேன். தற் கொலைகளால் இறந்தவர்களைப் பற்றிக் கதைப்பதுமொரு தற்கொலை மாதியானது எண்டு பிளாத்தே  சொல்லியிருக்கிறா..ஆகையால நேரத்தை மினக்கெடுத்தாமல் அடுத்த கவிதைக்குப் போறன்.

1962  ஆம் ஆண்டு மகாகவி உருத்திர மூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட கவிதை இது. இந்தக் கவிதை எனக்கு முதல் முதலில் படிக்கக் கிடைத்தது, 2002 ஆம் ஆண்டு நான் ஏழாம் வகுப்புப் படிக்கையில் .எனக்கொரு பதினோரு வயது இருக்கேக்குள்ள. இந்த மாதிரியான கவிதைகளை நீங்கள் என்ன நோக்கத்துக்காய்  படிக்கிறிங்கள் எண்டோ, அல்லது எந்த நோக்கத்திலை பாக்கிறிங்கள் எண்டோ எனக்குத் தெரியேல்ல, ஆனா நான் இதை ஒருக்காலும் தேர்ந்து எடுத்துப் படிக்கேல்ல.ஆனா படிச்சோன்ன எழுந்த மன நிலை இன்று வரைக்கும் என்னில இருந்து இம்மியளவும் போகேல்ல.  அதே மன நிலையோட தான் இண்டைக்கும் இருகிறன்.

BACK TO MEMORY எண்டு சொல்லுற உளவியல் உத்தி ஒண்டு இருக்குது. சில சம்பவங்களை நினைக்கிறதன் மூலம், அந்தச் சம்பவங்களுக்கான
காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதை அடைந்து விட்டதாகக் கற்பனை பண்ணுதல். அது இந்தக் கவிதையை வாசிக்கிற போதெல்லாம்
எனக்கும் நிகழும்.

நாங்கள் எப்பையாவது எங்களைச் சுற்றி இருக்கிற சின்னச் சின்னப் பொருட்கள், சின்னச் சின்ன உயிர்களில அனுதாபப் படத் தொடங்கியிருக்கிறோமா ? அப்பிடியெண்டால் எங்களைப் பற்றி யாராவது அனுதாபப் படோனுமெண்ட  மறைமுக விருப்பம் எங்களுக்குள்ள எழும்பீட்டுது எண்டு அர்த்தம். மனிதர்கள் எதையும் எதிர்பார்க்காமல்
இன்னொன்டைச் செய்யிறதில்லை இல்லையா ?

வாழ்க்கையிண்ட அதீதத்தை நாங்க ஏன் கொண்டாட மறுக்கிறம் ? எங்களிடம் இருக்கும், மிக நுணுக்கமான, மிகச் சின்னனான உணர்ச்சிகளை நாங்க ஏன் பத்திரப்படுத்துவதில்லை ? வேலையில்லாதவர்கள் செய்யிற வேலையா?

புள்ளி அளவில் ஒரு பூச்சி !
-மகாகவி உருத்திரமூர்த்தி

புத்தகமும் நானும் புலவன் எவனோ தான்
செத்தபின்னும் சேதிகள் ஏதேதோ சொல்ல
மனம் ஒத்திருந்த வேளை

ஒழுங்காக அச்சடித்த வெள்ளைத்தாள் மீதில்
வரியின் முடிவினிலே
பிள்ளைத் தனமாய்ப் பிசகாகப் போட்ட
காற்  புள்ளியைக் கண்டு
புறங்கையால்த் தட்டினேன்.

நீ இறந்துவிட்டாய்
நெருக்கென்றது என் நெஞ்சு !
வாய் திறந்தாய் காணேன் -
வலியால் உலைவுற்றுத் தாயே ,
என அழுத சத்தமும் கேட்கவில்லை.

கூறிட்ட துண்டுக்கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடி இருக்கவில்லை!

காட்டெருமை காலடியில் பட்ட தளிர் போல,
நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல,
பூட்டா நம் வீட்டித் பொருள் போல நீ மறைந்தாய் .

மீதியின்றி நின்னுடைய மெய் பொய்யே ஆயிற்று !
நீதியன்று நின் சா -
நினையாமல் நேர்ந்ததிது.
தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே !

காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்து வந்து  மோதிற்று
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப் படுத்துவிட்டேன்.

1962 -


இதில என்ன வேடிக்கைஎன்றால் முதல்க் கவிதை மாதிரியே இதுவும் ஒரு பாவமன்னிப்புக் கவிதை. ஆனா பிளாத்தைப் போல மறைமுகமாக தன் மேல பாரத்தைத் தூக்கி மகாகவி போடேல்ல. நேரடியா அதற்கான மன்னிப்பைக் கேட்டு பாவத்தை இரட்சிக்கச் சொல்லுறார். ஒரு வெளிப்படை மனோ பாவம். இது தான் ஆண் பெண் மனோ பாவமோ தெரியேல்ல.

புள்ளி அளவில் ஒரு பூச்சி , மகாகவியினுடையது.
இது என்ன கதை எண்டா, இது அநேகமானவர்கள் வாழ்வில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளிலொன்று. பல தடவைகள் புத்தகங்களைப் புரட்டும்போது உள்ளே இறந்து ,உலர்ந்து தாள்களோடு ஒட்டியிருக்கும் பூச்சிகளைப்  பார்த்திருப்போம்.

புள்ளி ,குஞ்சுப் பூச்சி ஒன்று தெரியாத் தனமாக புத்தகத்துக்குள் ஆப்பட்டுச் செத்தே போயிற்று, கொன்ற பாவம் ! கொலைக்காரப் பட்டத்துக்கு அஞ்சுகிற மன நிலை.....இதெல்லாம் தான் இங்க...சாவு, இழப்பு, சோகம் போன்றவற்றைக் கவிதைகளால மட்டும் தான் கொண்டாட முடியுது, அல்லது கவிதைகள்  மட்டும் தான் கொண்டாட இடம் கொடுக்குது. அது ஒரு உற்சவம் மாதிரி, இழப்புத் திருவிழா மாதிரி. கவிதைகளில கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். மகாகவி  தண்ட விருப்பத்துக்குக்  கொண்டாடுகிறேர்.

இப்பிடித் தான் தொடங்குகிறார். புலவன் செத்தபின்னும் சேதிகள் சொல்லுவானாம் ...ஆனாச் செத்துப் போன பூச்சி  சொன்ன சேதிகள் தான் இங்க ஏராளம்.

//ஒழுங்காக அச்சடித்த வெள்ளைத்தாள் மீதில்
வரியின் முடிவினிலே
பிள்ளைத் தனமாய்ப் பிசகாகப் போட்ட
காற்  புள்ளியைக் கண்டு
புறங்கையால்த் தட்டினேன்.

நீ இறந்துவிட்டாய்
நெருக்கென்றது என் நெஞ்சு !
வாய் திறந்தாய் காணேன் -
வலியால் உலைவுற்றுத் தாயே ,
என அழுத சத்தமும் கேட்கவில்லை.
//

பூச்சி செத்துப் போச்சுது. அது அழேல்ல...! வாயைத் திறந்து ஒருக்காலும் கத்தேல்ல....நீ தானே என்னைக் கொண்ட நீ எண்டு விரல் சுட்டிக் காட்டிக் குடுக்கேல்ல.... இங்க தான் பிரச்சினை தொடங்குது. எங்கட ஆளுக்கு பயங்கரக்  குற்ற உணர்ச்சி....

எங்களுக்கெல்லாம் ஒரு விஷயம்....ஏதாவது ஒரு பிழை செஞ்சிட்டால், யாரையாவது திட்டித் தீர்த்திறோணும் , அல்லது ஆற்றையாவது தலையில பழியைப் போட்டிடோனும், அல்லது அதுக்கொரு  காரணத்தைப் படிப்பிச்சிறோணும் , அல்லாட்டில் அதனுடைய  மீளாப் பாவத்தில இருந்து மனதாலும் வெளிவர முடியாத ஒரு குற்றப் பரம்பரைக்கு ஆட்பட்டுப் போயிருவம்.

உண்மையில் இக்கவிதையை இரு விதமாகப் பொருள் கொள்ளலாம்.ஒண்டு,  ஏற்கனவே இறந்து கிடந்த பூச்சியொன்றை, புள்ளியாக நினைச்சுத்  தட்டி, அது ஏற்கனவே இறந்ததுதெரியாமல், அது இறந்தது தன்னால்தானென எண்ணிக் கவிஞர் கவலையுறுவதாகக் கொள்ளலாம் அல்லாட்டில்  புள்ளிக் குஞ்சுப் பூச்சி, அவற்றை  கை தட்டுப் பட்டு இறந்ததாகக் கொள்ளல்லாம், அது பற்றின பாவமன்னிப்புப் பாட்டுத்  தான் இது.

  //'கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்ட' அந்தப் பூச்சி வலியால் உலைவுற்று வாய் கூடத் திறக்கவில்லை.//
// 'காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்ததுபோல்' நெரியுண்டு கிடந்தது.//

அதனுடைய சா நீதியன்று என்று கவிஞரின் மனம் வருந்துகிறது.நினையாமல் நேர்ந்ததிது,..... தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே ! , என்று அந்த அமரப்  பூச்சியிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

தன்னைப் போல இன்னொரு உயிரை நேசிக்கிறதெண்டுறது லேசான காரியமில்லை.


//மீதியின்றி நின்னுடைய மெய் பொய்யே ஆயிற்று !
நீதியன்று நின் சா -
நினையாமல் நேர்ந்ததிது.
தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே !//

ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற சடுதியான இழப்பு , அவனை நிலை குலைய வைக்கிரதொடு மட்டுமல்லாமல், தன்னைக்  காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அனுபந்தத்தையும் தூண்டி விடுகிறது.அந்த  தற்பாதுகாப்புக் கோட்பாடு தான், முதலில் பூச்சியினுடைய சாவுக்குப் பக்குவமாக நீதி சொல்லி, அது அநீதி என்று முடிவெடுத்து, தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள இறந்த உயிரியிடமே பாவ மன்னிப்புக் கோருவது !

இன்றைக்கு இரண்டு கவிதைகளைப் பற்றி நயம் சொல்லுறதால ஒன்றை ஒன்று ஒப்பிடத் தோன்றுவதைத் தவிர்க்க முடியேல்ல.பெண் கவிதையினுடைய தன்னிரக்கம் நிறைந்த,  பாவத்தில் இருந்து விடுவிக்க முயற்சி செய்யாத  பாவ மன்னிப்பையும், ஆண் கவிதையினுடைய பாவத்தின் பிடியில் இருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ளத் துடிக்கும் தன்னிரக்கப் பாவ மன்னிப்பையும் ,அவரவர்களது சூழ் நிலைகள் என்பதா, ஆண், பெண்  இயல்பு நிலைகள் என்பதா என்ற பெரும் கேள்வியோடு இதை முடிக்க வேண்டிய நிலையில இருக்கிறன்.புறக்கணிக்கப்பட்ட  உயிர்களைக் கொண்டாடுகிறார் கவிஞர் !



//காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்து வந்து  மோதிற்று
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப் படுத்துவிட்டேன்//

 ***


நிலா -

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி