Skip to main content

பிரம்மச்சரியத்தின் பிலாக்கணம்!



                                            


இலையுதிர் காலமாதலால்
ஒவ்வொரு பௌர்ணிமையிலும்
அரச மரங்கள், இலைகளை
சட்டை கழற்றுவது போல ஒரு வித
சலசலப்புடன் உதிர்த்துக் கொட்டுகிறது !

அல்லது

இலையுதிர்காலத்தின்
இறுதி மரணந்தழுவும்
வெள்ளரசு மரத்தினிலைகள்
தெரு நாயொன்று சிரங்கு தாளாமல்
உடலை சடசடத்து உலுப்பிக் கொள்வது போல
உதிர்த்துக் கொட்டுகிறது !

கீழே போதிசத்துவன் இருந்தான்
புகழ் மாலையில் நனைவது போல
பழம் இலைகளாலும்,
இலைகளின் சவங்களாலும், சருகுகளாலும்
அபிஷேகிக்கப்பட்டான்.
அதில் எதோ
உத்தமத்தை உணர்ந்தவன்,
சடத்துவத்தைத் தாண்டி சத்துவத்துக்குள் நுழைந்தான்.

பிரம்மச்சரியத்தின்
அந்தம் பற்றி புல்லுருவியாக
வியாபகமாகிக் கொண்டு வருகின்ற
படிகளில் என்
முன்னேற்றம் தெரிகிறது !

 என் அம்மா
எனக்குத் தந்த இறுதி
அரவணைப்போடு-
'அம்மா' என்கிற காட்சிப்புலமும் ,
அதன் விஸ்தீரணமும் என்
வட்டத்துள் இருந்து தீர்ந்து போயிற்று.

இன்று
உணரக் கூடியதாயிருக்கிறது,
எனக்கான குழந்தைகளுக்காக
சேமித்து  வைத்த
அன்பு முத்தங்களைப் பரிமாறியபடி
நிலவு காட்டி சோறூட்டப் போகும்
ஒரு நாளோ இரு நாளோ
என் வாணாளில் இருந்து தொலைந்து விட்டதை.

பொய்- உண்மை-மெய்-வினை-புகழ்ச்சி
ஏதொன்றும் அறியாதவன்.
அல்லது அறிந்தும் அறியாதவன்.
உணர்ச்சிகளுக்குக் குட்டுப்பட்டவன்.
போதிசத்துவன் !

இரவில் பறக்கும்
நாரைக் கொக்குகளை பிடித்துத் தரும்படியோ,
ஒன்றிரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
தேன் மொண்டு போதையில் போகும் போது,
பிடித்துத் தா என்று-
கெஞ்சிக் கொண்டோ
ஒற்றைக் காலில் முறண்டு பிடித்துக் கொண்டோ
முகவாய்க் கட்டைத் திருப்ப மாட்டாள் -
என் சின்ன மகள் !

தொலை தூரத்தில் விரவும்
தெரிந்தவர்களின் வருகைக்காக,
என் இடுப்பிலிருந்து நழுவி ,
வழுக்கி ஓடி ,
மண் பிறண்ட நுனிவிரல்களால்
என்னையே நோக்கி மீண்டும்
ஓடி வரமாட்டாள் அவள்.

குழந்தைகள் சூழ்ந்த
நதிப் பிரவாகத்தில் இருந்து
வெறுமையின் பழைய வாடை........

அத்துவைதத்தின்-
டாம்பீகத்தைத் தோற்கடித்து-
மாயா சக்திகளை முறியடித்து-
நானும், போதிசத்துவனும்
ஒன்ரற அல்லது இரண்டற அல்லது
முழுவதுமாய்க் கலந்து விட்டோம்.
கலந்ததினால்க்  காட்சிகளுக்குப் புலனாக மாட்டோம்.
புலப்பட்டால்த் தான் உணர்ச்சிகளும்,
அதன் பிறழ்வுகளும்.
இப்போது எமக்கது இல்லவே இல்லை !

ஆக ஒரு போதும்
தேவ மாதா சொல்லித் தந்த
பிரம்மச்சரியத்திலிருந்து பிறழப் போவது இல்லை.

ஆத்தும விசாரியைப் போல,
போதியின் விசாலமான வேர்களைக் கடந்து போகிறேன்.
எந்த வேரிலும் இப்போது ஈரமில்லை.
முன் போல ஈரமேயில்லை...!

இனி எனக்கு
எது பற்றியும் அந்தரங்கமான படபடப்பு இல்லை,
ஆதலால்
என் கடைசி  மகளையோ, மூத்தவளையோ கை பிடித்து
பள்ளிக்கு அள்ளிச் செல்லும் காட்சிகளும்
கனவில் தனும்  வந்து  போகாது.

நானும் ,
போதிசத்துவனும் ஒன்றிப் போனோம்
எங்களுக்குள்  ஐக்கியம் தாண்டவமாடுகிறது.
தாண்டவத்தின் உச்சியில் நிருத்தியமும் நடக்கிறது.

போதிசத்துவன்,
தன் நிலைபரம் சொல்லி
என்னை ஆசுவாசப் படுத்தியதாய்
எண்ணிக் கொண்டிருக்கிறான்.
எரிகிற தீயில் தழல் பொறுக்கும்
வேலையைச் செய்திருக்கிறான்.
ஹ்ம்ம்...
தான் வாழப்போவதையும்,
தான் வாழப்படப் போவதையும் எண்ணி
கிறக்கத்தின் உச்சியில் இருக்கும் - அவன் -
ஆசைகளை உண்மை சொல்லிக் கலைக்க
விரும்பவில்லை.
நிலையாது நிலையாது என்று சொல்லிக்
கொண்டே நித்தியத்துவம் தேடிப் போகிறான்.......

எது ,
எப்படி,
எவ்வகையாகினும்,
ஒன்றே ஒன்றுக்காக
நான் இன்னமும் நெகிழ்ந்து,
பூரித்துப் போகிறேன்.
இனி
என்
குழந்தைகளுக்காக,
தமிழிலேயோ,
சமஸ்கிருதத்திலேயோ,
மணிப்பிரவாளத்திலேயோ
பெயர் தேட வேண்டி இராது....!

நான்,
பிரம்மச்சரியத்தின் பிலாக்கணத்தை
ஒவ்வொன்றாகப் பாட ஆரம்பிக்கின்றேன்.
ஒவ்வொன்றும், இறுதி நிலையில்,
மூர்ச்சையின் இனிமையைத் தருகிறது.



-நிலா - 
 3/12/2010


Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி