Skip to main content

அப்பா சொல்லித்தந்த இசை....

        

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன். 

இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற...

என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ! என் இசையின் தெரிவு குறித்தே என் நிகழ்வுகளும், என் நிகழ்வுகளின் மறுதாக்கமாகவே இசையும் என்னைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறது.பொதுவாக எல்லா ஓசைகளிலும் இசையின் நுழைவை ஆராதிக்கின்ற ஒரு குணவியல்பு என்னில் இருந்திருக்கிறது. 

ரயிலின் அச்சக்கரியில் குகை கடந்து போகிற கூச்சல், வால் மிதிபட்ட குட்டி நாயின் நசுகல் ஓசை,தாவாரத்து மின்விசிறி ஓய்ந்து போகும் போது கிரீச்சிருகிற சப்தம் இப்படி நுணுக்கமாக நிறைய. எதோ ஒரு சினமாவில் கோழி கூவுவது எந்த ராகத்தில் என்று பார்க்க அதிகாலையிலேயே கோழிக் கூட்டுக்குள் ஒளிந்திருந்த கதை ஞாபகத்துக்கு வருகிறது. எல்லா ஓசைகளுமே இராகம் என்கிறதை அடிப்படையாகக் கொண்டியங்கிறது  என்பதை நான் முற்றிலுமாக தலையசைப்பேன்.என் இசையினது நெருக்கம், அல்லது இசைபட வாழ்தல் எங்கே எப்போது ஆரம்பித்தது என்கிறதில் எனக்கு நிறைய ஐயப்பாடுகள் இருந்தாலும், நினைவு தெரிந்த சில சம்பவங்களை தடயங்கலாக்கலாம் என்று நினைக்கின்றேன். 

முன்னம் ஒரு காலத்தில், நான் சின்னப் பிள்ளையாக இருந்த சமயம் (இப்பையும் அப்பிடித்தான் இருக்கிறேன், இதையும் விடச் சின்னனா இருந்தபோது ), ஒரு மூண்டு நாலு வயசிருக்கும், அப்ப யாழ்ப்பாணத்தில கரண்ட் இல்லை. அம்மா ரோசாப்பு நிறத்தில நுளம்புக் கூடு ஒன்ராளை என்னைப் போர்த்து விட்டிருப்பா. அம்மாவுக்கு ரெண்டு பக்கத்திலையும் நானும் அண்ணாவும், எனக்குப் பக்கத்திலை அப்பா, அதிகாலையில் அப்பா நல்ல சூடாய் இருப்பார். சூடாய் இருக்கிறதெண்டால் கோவமாயிருக்கிரதெண்டு பொருளில்லை, பங்குனிக் குளிரோ, மார்கழிக் குளிரோ, வருகிற அதிகாலைப் பனி தோய்ந்த காற்றுக்கு அப்பாவைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரை கொண்டால் மிதமான சூடும், மழிச்சும் மழிக்காமலும் இருக்கிற அவரது குத்தும் மீசையும் ..அப்பா அப்போது எங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ. 

சேட்டுக் கழற்றின நெஞ்சிலே என்னைத் தூக்கி யானை ஏற்றிக் கொண்டு பற்றரி ரேடியோவின் ஏரியலை இழுத்து சரிபண்ணிக் கொண்டிருப்பார். அப்ப இலங்கைத் தேசிய சேவையும், பி.பி.சீயும், புலிகளின் குரலும் தான் அப்பா காதோடை ஒட்டி வச்சுக் கொண்டு நியூஸ் கேப்பார். வேற அலைவரிசை பிடிபடாமலும் இருக்கும். ஆனா அதிகாலையில் இந்திய வானொலிகள் பிடிபடுவதும், காலையில் சங்கீத மேடை கேக்க அப்பா ஆலிந்தியா ரேடியோ பிடிப்பதும், திரைகடல் ஓடியும் தமிழ் நாதம்  கேக்கிறதும், இல்லாட்டில் "ஆகாச வாணி" (மலையாள  வானொலி சேவை ) இழுப்பதும் நாளாந்தமாகிவிட்டது. ஆலிந்தியா ரேடியோவில் ஒலிக்கிற மாட்டு சீவனத்துக்குப் போகும் விளம்பரமும், கோபால்ப் பல்ப்  பொடி விளம்பரமும் அன்றாடம் நானும் அண்ணாவும் வீட்டில் கத்திக் கொண்டிருக்கிற சமாச்சாரம்.     

அப்போது தான் நான் மலையாளப் பாடல்களின் உலகத்துக்குள் அறிமுகமாகிக் கொள்கிறேன். ஒன்றுமே புரியாது.தமிழிழே இருந்தால் மட்டும் ஏதும் புரிந்து விடும் என்கிற வயதில்லை. பாடல்கள் என்கிற வரைபடங்களே புரியாத வயது. ஆகாசவாணி, ஆகாசவாணி என்று அந்தப் பெண் கதைப்பது மட்டும் எதோ கேட்கும், ஆனால் தாலாட்டுப் பாடுகிறதைப் போல எல்லாப் பாடல்களும் என்னைத் தழுவிக் கொண்டே போகும், ஒரு மெல்லிய காற்றைப் போல, தாலாட்டு என்கிற வகையறா மட்டும் தெரிந்த வயதென்பதால் அவை அந்த ரகத்தில் தோன்றியதோ என்னமோ..ஆனால் அவற்றின் மிருதுத் தன்மை இன்னமும் எனக்குள் அதையே தான் ஒலிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. 

எஸ். ஜானகி அவர்கள் பாடிய "இன்னலே நீ ஒரு சுந்தர" என்கிற பாடல் இன்னமும் என் நினைவுகளில், இப்போது எப்போது கேட்டாலும் அந்த மூன்று வயது நினைவுகள், குழந்தையாகிப் போதல் போல கண் முன் வரும். ஆனால் இந்தப் பாடல்களை நான் இப்போது தேடித்தான் கேட்க வேண்டிய நிலை.அப்பா பாடலோடு சேர்ந்து வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். விடிகாலை ஐந்து மணி போல இருக்கும்.பொழுது புலர ஆரம்பிக்கிற அந்த நொடிகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல்கள். கல்லூரி,கடமைகள், சரீரப் பிரயத்தனம் எதுவுமே இல்லாத அந்த வயதில் பிஞ்சுக் கைகளை இறுக்கிப் பொத்திப் பிடித்துக் கொண்டே சொப்பனம் காண்கிற முகத்துடன் பிராயத்தின் முன்பாதியில் கேட்டிருந்த இசையின் முகப்புக்கள். 


இன்னொரு 'இன்னலே' என்ற பாடல்,  பாடகர் யேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்கள். "யமுனாகல்யாணி" ராகத்தில் அமைந்திருக்கும், அப்போதும் அப்பா தான் அது இன்ன ராகம் என்று சொல்லுவார், இப்போதும் அப்பா தான் சொல்லுவார், எனக்கென்னமோ இது "கேதாரம்" போலப் படும். என்ன கருமமோ கேதாரத்துக்கும் யமுனா கல்யாணிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தெரிந்தும், நான் இது கேதாரம் தான் என்று அடம்பிடிப்பதை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை. அடம் பிடித்தலுக்கும் அதிகாரத்துக்கும் வித்துப்போட்ட இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் என்னுடைய காணாமல்ப் போன ஒரு நீலக் கலர் "சொக்ஸ்" (காலுறை ) இனுடைய ஞாபகம் வரும். 

ஞாபகங்களும் நினைவுகளும் எந்த அந்தத்தில் இருந்து வேண்டுமானாலும் வாலாம் என்று நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன். பீ.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கும்,யேசுதாஸ்  அவர்களின் குரலுக்கும் எதோ ஒரு ஒற்றுமையும், இரண்டுக்குமே என்னை ஆகர்ஷிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. ஏனென்றால் இரண்டையுமே நான் கொண்டாடிக்கொண்டிருப்பேன், எப்போதும். 

 http://www.youtube.com/watch?v=5C12uyoHc8A&NR=1(innale-Dr.k.j.yesudass-malayalam)

இந்தப் பாடலுக்குள் வருகிற ஹார்மோனியத்தினதும், மெல்லிய சித்தாரினதும் கலவையும் வயலினின் இழுவையும், குரவைக் கொட்டுவனது சப்தமும், கஸல் பாணியும் என்னை என்னமோ செய்யும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால், அதான் என்னமோ செய்யும் எண்டு சொல்லிட்டனே, பிறகு என்ன செய்தால் என்ன....ஏதாவது வார்த்தையைச் சொல்லிப் போட்டு அதை மழுப்ப இன்னொரு வார்த்தை பிடிக்கிற அவஸ்தை இருக்கே....சப்பா... 

   
இன்னொன்று, யேசுதாஸ் அவர்களின் "பிராண சகி..."அர்த்தங்கள் தெரியாமல் எழுந்தமானமாகக் கேட்கப் படுகிற இந்தப் பாடல்கள் தான் என்றைக்கும் நிலைத்து நிற்கப் போகின்றவை என்று நான் நினைத்திருக்கவில்லை. நினைக்காதவை நடந்து போகிற என் இயல்பில் இவற்றின் அழுத்தங்களும் ஆழமானவை. இந்தப் பாடலை நான் இன்று தான் ஆண்டுகள் கழித்து விசுவலாகப் பார்க்கிறேன். ஆரம்ப கால நினைவுகள் எப்போதும் ரம்மியமானவையாகவே இருக்கின்றன. 

http://www.youtube.com/watch?v=Ly4RuK872GA&feature=related 9pranasaki--Dr.k.j.yesudass-malayalam)

 தமிழ்ப் பாடல்களுக்கும், வேற்று மொழிப் பாடல்களுக்கும் பிரிவு தெரியாத அந்தக் காலத்தில் அப்பா வைத்திருந்த ஒரு பழைய இசைத்தட்டில் நிரம்ப தெலுங்குப் பாடல்களும், மலையாளப் பாடல்களும் ,ஹிந்திப் பாடல்களும் இருக்கும். அது அப்பாவின் டிவி, லாச்சிக்குள் பத்திரப்படுத்தவும் பட்டிருக்கும். அப்பாவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஆரும் வரும் போது அப்பா இவற்றையெல்லாம் பற்றி  நிறைய நேரம் சிலாகித்துக் கொண்டிருப்பார். 
அம்மா இந்தா கச்சேரி தொடங்கீட்டுது என்று சிரித்துக் கொண்டிருப்பார். கண்ட சாலா அவர்களின் தெலுங்குப் பாடல்கள் காற்று வாக்கில் கேட்டுக் கொண்டிருக்கும், 

சாடையாக ஞாபகமிருக்கிற இந்தப் பாடல் எப்போதும் ஆறு மணிக்குப் பிறகு தான் வீட்டில் ஒலிக்கும். என்னமோ தெரியவில்லை, பாடல்களுக்கும் அவற்றின் காலத்துக்கும் ஒரு அந்திமத்தனமான அனுபந்தம் இருந்து கொண்டே இருக்கும். இன்னும் சில ஹிந்திப் பாடல்கள் அப்பா இன்னமும் வைத்திருக்கிற பட்டப் பழைய சீடிக்கள், எனக்கு கொலை செயிறளவுக்குக் கோவம் வரவைக்கும். 

நான் ஏதாவது முக்கியமான பாடல்களைப் நெருட்டுப் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அந்த 'சங்கம்' பாட்டைப் போடம்மா, இல்லாட்டில் 'கீத்', இல்லாட்டில் 'அபிமன்'....முந்திக் கொஞ்சக் காலம் இந்த மாதிரியான பெறக் கேட்டாலே படூ பயங்கரக் கோவம் வரும்,அந்த இசையின் உன்னதம் தெரியத் தெரிய , அதன் ஆக்கிரமிப்பு புரியப் புரிய நெடுகாலத் தபோவனத்தில் குடியிருக்கிற ஒரு நிலைப்பு வரும். அர்த்தம் புரியாத அந்தப் பாடல்களின் அர்த்தமும், அப்பாவின் தேர்வுகளும் என்றைக்குமே ,அந்தக் குழந்தைக் காலத்தை உணர்ச்சிகளுக்குக் குட்டுப் படாத காலத்தைக் கொண்டு கண் முன் நிறுத்தும். 

தோஸ்து தோஸ்து நாரஹா, முகேஷ் அவர்கள் பாடிய பாடல், 1964ம் ஆண்டு வெளிவந்த சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இமை மூடி நெருக்கடியான சூழலைத் துரத்துவதற்காக நான் இப்போது கேட்கப்   பிரியப் படும் பாடல்களில் ஒன்று இது. 

 http://www.youtube.com/watch?v=vwdx8nL4jXg (dost dost -Mukkesh-hindhi)
"அபிமன்னில்" இடம் பெரும் தேரே மேரே மிலன்னு கீ யே ரானா...

எப்போதும் சொல்லி மாளாத வார்த்தைப் பிரயோகத்துக்குக் கட்டுப் படாத பாடல்கள். இந்தப் பாடல்களை விடவும் அழகிய பாடல்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கச் செய்யலாம். ஆனால் பாலிய வயதின் அடிநாதமாக இசையை ஆரம்பித்து வைத்த அந்தச் சொற்ப காலத்துக்குள் பதிந்த இவை என்றைக்கும் இனித்துக் கொண்டே இருக்கும். 


இந்த ஆரம்பத்துக்கேல்லாம் அப்பா தான் இசை என்கிற வடிவம் கொடுத்து என்னக்குள் ஊற்றியிருக்கிறார். ஆக அந்த வார்ப்புத் தான் இன்னும் என்னை ஆலாபிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது, ஆகையால் இது அப்பா சொல்லித்தந்த இசையாகப் பயணிக்கும்.  
     
"ஸ்ரீ சம்புத்த ராஜா வந்திம் " என்கிற இந்தப் பாடல், சுஜாதா அத்த நாயக்க அவர்களால் படிக்கப்பட்டது. அந்தக் காலத்தில்  ரூபவாஹினியில் எப்போதும் போய்க் கொண்டிருக்கும். இந்தப் பாடல் கேட்கும் வரைக்கும் நான் புத்தன் என்கிற ஒரு பரி நிர்வாணனை உணர்ந்து கூட இருக்கவில்லை. முன்பே சொன்னது போல் எனக்கு மிகச் சிறிய வயது தான். ஆனாலும் இதற்குள் ஒரு பரிபூரணத்தின் திரவியம் இருப்பதை கேட்கிற போதுகளிலேல்லாம் உணரமுடிந்தது. அப்பா கண்ணை மூடிக் கொண்டு மெய்மறந்தவர் போலக் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மாவுக்கும் கூட இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலின் இசையும் இடையில் வருகின்ற கோரசும் எத்தனை தடவை வேண்டுமாகிலும் பாடலைக் கேட்கத் தூண்டும். 


பின்னைய காலங்களில் நான் கண்டியில் வசிக்கும் போது, ஒவ்வொரு விசாகப் பண்டிகைக் காலத்திலும் கொழுத்தி நிற்கின்ற வெளிச்சக் கூடுகளுக்கு மேலாக எங்கிருந்தோ இந்தப் பாடல் ஒவ்வொரு விகாரங்களினுள்ளும் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும். 

அப்போது எனக்கு சிங்களம் பரீட்சயமாயிருந்தது, எட்டு ஒன்பது வயதிருக்கும். தெருக்களிலும், எங்கள் பாடசாலையிலும், எங்களது சிங்களப் பாடசாலை, புத்த பூர்ணிமைக் காலத்தில் விசாக வெளிச்சக் கூடுகள் அமைக்கிற போட்டிகளெல்லாம் நடைபெறும், அப்போதெல்லாம் இந்தப் பாடல் பள்ளிக்கூடத்திலும்,சத்தமாக ஒலிக்கவிட்டிருக்கும். அந்த அந்தகார ஒலிக்குள் நான் எதையோ தேட விழைந்திருக்கிறேன். அதற்குப் பிறகு கொழும்பு வந்த பின் நீண்ட நாட்களாக இந்தப் பாடல் கேட்கவே இல்லை, எப்போதாவது பெட்டாவுக்குப் போகிற வழிப்பயணத்தில், கூவிக் கூவி பொருள் விற்கின்ற அந்த அங்காடித் தெருவிலே , சிங்களப் பாட்டுப் புத்தகக் கடையில், அடிக்கி வைத்திருக்கும் இறுவட்டுக்களுக்கு மத்தியிலிருந்து இந்தக் குரல் சுவர்களை உடைத்துக் கொண்டு வருகிறதை என்னாலே உணரமுடியும். நாலு பேர் பார்க்க அங்கேயே பாட்டு முடிகின்ற மட்டும் நின்றுவிடுவேன். 


http://www.youtube.com/watch?v=nQLmJVM-RNo&feature=related 9sri sambhuddha raja vanthim- sujatha aththanayakka)


அடுத்தும் இன்னொரு பரிநிர்வாணன் பற்றிய பாடல். "அங்குலிமால்"  என்கிற ஹிந்தித் திரைப்படத்தில் இருந்து, மொஹிடீன் பேக் அவர்கள் பாடி இருப்பார்கள். என்ன ஒரு பாடல், நான் தனியே இந்தப் பாடல் பற்றிக் கிலாகித்துக் கொண்டிருந்தால் காணாது, நீங்களும் ஒருமுறை கேட்கவேண்டும். தவத்தின் சாயலை அடைய வேண்டும் என்று தோன்றுகின்ற ஒவ்வொரு பொழுதுகளிலும் நான் கேட்க விரும்பும் பாடலிது.


இந்தப் பாடலை மொஹிடீன்பேக் அவர்கள்  பாடிக்காட்டியதும், அப்போது பண்டாரநாயக்க அரசாங்கத்தில் இருந்த காலம்,இந்தியரான அவருக்குப் பரிசாக இலங்கைக் குடியுரிமை கொடுத்துவிட்டாராம். அவர் இலங்கையில் நீண்ட காலமாக வாழ்ந்த குஜராத்தியர். அதாவது மராத்தியத் தாய் மொழியாகக் கொண்டவர். அவர் ஒரு "அல்ஹாஜ்" என்பதும் குறிப்பிடத்தக்கது.புத்தனைப் பாடிப்பாடியே இறுதிக்காலம் வரை இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, சிங்கள இசைப்பயணத்தைக் கடந்து போனவர்களில் மிகப் பிடித்தமான குரல் இவருடையது. 


இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் "இஷாக் பேக்" அவர்களும், அதே புத்தனின் பாடல்களையும் இன்ன பிறவற்றையும் பாடுகிறார், அதே குரலமைப்பு, அவரையும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு தடவை இந்தப் பாடல் ஒலிக்கிற போதும், அப்பா இவருக்குக் கிடைத்த இலங்கைக் குடியுரிமை பற்றி வியந்து சொல்லிக் கொண்டிருப்பார், அவர் அரசாங்கத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பாராம்.

குருவாரூரானை நேரிலே சென்று பார்க்க நெகிழ்ந்து உருகிப் பாடுகின்ற யேசுதாஸ்  அவர்களும் கூடவே நினைவுக்கு வருவார்.எல்லா இடங்களிலும் மதங்களைக் கடந்த மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பாடலும் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் அருகிலே இருக்கும் விகாரங்களில்  இருந்து எனக்காக மட்டும் காதுகளில் மிக மெல்லிதாக ஒலிக்கும். வேறு யாருக்கும் கேட்கிறதா என்று கேட்பேன், யாருக்குமே கேட்காது, எனக்கு மட்டும் தான் அந்த நிகழ்வு. மனப் பிரம்மையோ, இல்லை புத்தனுக்கும் எனக்குமான அதீத தொடர்புமையோ ஒன்றும் அறிகிலேன். இன்றைக்கு இந்தப் பாடலைக் கேட்டு விட்டால் அன்றை முழுவதுக்கும் வேறு எதுபற்றியும் சிந்தனை வாரா. இப்போது கூட வேறு சிந்தனைகளில் இருந்து வெளிவர வேண்டுமென்றால் இந்தப் பாடலை உரத்து ஒலிக்க விடுவேன்.கின்னரர்களின் மதுரம் இதில் கிடைக்கும்.......,

இஷாக் பேக் அவர்களின் இந்தப் பாடலும் முன்பு கூறிய அதே உணர்ச்சியைத் தரவல்லது. சிறுவயதிலிருந்தே கேட்டுக் கொண்டிர்க்கும் அலுக்காத பாடல். கட்டாயம் சிங்களப் பாடல்கள் பற்றய அறிமுகத்தின் போது கேட்டிருக்க வேண்டியவை இவை. 


மொஹிடீன் பேக் அவர்களின் வரிசையில் இன்னொரு நகைச்சுவையான பாடலும் நினைவுக்கு வரும். டிக்கிரி மெனிக்கே (ambula)அபுல கெனல்லா, கோவி ராலா கொடட்ட அவில்லா. என்கிற ஒரு நாட்டுப்புறப் பாடல்.

'டிக்கிரி மெனிக்கே' என்கிற பெண் புளிச்சோறு கொண்டு வருகிறாள்- விவசாயியான அவள் கணவன் தோட்டத்துக்கு வருகிறான் )இந்தப் பாடல் கேக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தச் சங்கதி தான் நினைவில் வரும். அப்போது 1989ஆம் ஆண்டு காலப் பகுதியாய் இருக்க வேண்டும்,  பிரதமராய் இருந்த போது பிரேமதாச அவர்கள் கிளிநொச்சிக்கு வருகிறார்கள். 

கிளி/ மத்திய மகாவித்தியாலயத்தில் அவருக்கு விருந்தும் விழாவும் ஏற்பாடாகியிருந்தது. அம்மா தலைமையில் பள்ளிக் கூடப் சிறுமிகளுக்கு சிங்களப் பாட்டு பயிற்ச்சி நடக்கிறது, எல்லாம் முடிந்து அந்த நாளும் வந்தது, பிள்ளைகளும் பாட்டை மேடையில் பாடுகின்றனர். 

"டிக்கிரி மெனிக்கே "(ambuda)அபுட" கெனல்லா - கொவி ராலா கொடட்ட அவில்லா..!டிக்கிரி மெனிக்கே 'அபுல பெதனவா" -(புளிச்சோற்றை பங்கிடுகிறாள்.)   ." இப்பிடித்தான் பாடுகின்றனர்.

மேலே சொல்லி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. "அபுட "என்றால் சிங்களத்தில் "கோவணம்" என்று பொருள். அதற்குப் பிறகு சபையில் நடந்ததைக் நீங்களே கற்பனை பண்ணுங்கள். 

அந்த இடத்தில் சிங்களம் தெரிந்தவர்கள், பிரதமரும், அப்பாவும், அவருடன் வந்த மெய்காப்பாளர்களும் மட்டும் தான்.போகிற போது பிரதமர் அப்பா காதிலே, நிகழ்ச்சி நன்றாகத் தான் இருந்தது, டிக்கிரி மெனிக்கே "அதைக்" கொண்டு வரும் போது மட்டும்  எனக்கு பட படா என்று நெஞ்சு அடித்துக் கொண்டிருந்தது என்று நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். இப்போதும் நினைத்து நினைத்துச் சிரிக்கும் குழந்தையாய் ...! குழந்தையாய்இருக்கிற காலத்தில் இருந்தே குபீர் சிரிப்பைக் கொண்டுவரும் அந்தப் பாடல்  இதோ,   


http://www.youtube.com/watch?v=KzYF9WEsj-Y (tikiri menikke abula-ishak beg)

இன்னும் மொஹிடீன் பேக் அவர்களின் சில பாடல்கள் இணைப்பு இதோ. சிங்களப் பாடல்களில் அதிகம் பரீட்சயம் இல்லாதவர்களுக்காக,

முந்தி ரூபவாஹினியில் அடிக்கடி போகிற இந்தப் பாடல், நல்ல காலம் இப்போது 'யூ -டியூப்' என்கிறதொரு களஞ்சியம் இருக்கிறது. பழைய சிங்களப் பாடல்களின் அதீத சாயலையும், ஒரு மெல்லிய வருடல்த்தன்மையையும் அனுபவிக்க நினைப்பவர்கள் இதனைக் கட்டாயம் கேட்டே ஆகவேண்டும்.

சுஜாதா அத்தநாயக்கவும், ஆர்.முத்துசாமி என்கிற "தமிழரும்" இசையமைத்துப், பாடியிருக்கிறார். சுஜாதா அத்தநாயக்க அருமையான ஒரு பாடகி, தமிழில், பீ.சுசீலா அவர்களைப் போல முதன்மையானவர். பாடலுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் சின்னதான ஒரு தாளக் கட்டு பாதத்து விரல்களை பூமியில் தாளம் தட்டச் சொல்லும்.

 http://www.youtube.com/watch?v=tJqz0whEf1s&feature=related


அடுத்து அசல் சிங்களக் கிராமத்துக் கதைகளையும், நாட்டார் பாடல்களையும் பார்க்கவும் கேட்கவும் விரும்பியவர்களுக்கானது. இந்தப் பாடலையும் ஆர். முத்துசுவாமி இசையமைத்துப் பாடியும் இருக்கிறார்.

 தமிழ் சினமாவில் ஏ.எம் ராஜாவின் சாயல் இவருக்கு. சுஜாதா அத்தநாயக்க அருமையான குரல் வளம் கொண்ட சிங்களத் திரையுலகின் அதி முக்கியமான பாடகி, விறுவிறுப்பான தமாஷான பாடல், குழந்தைத்தனத்துடன் ஆட வைக்கும் பாடல், குழந்தைகளுக்கு இந்த மாதிரி மெட்டுக்களில் அமைந்த பாடல்கள் நிரம்பப் பிடிக்கும். என்னை ஆட வைக்க அப்பா போடும் பாடலிது. ( தயவு செய்து கற்பனை பண்ணிப் பார்க்காதீர்கள்) தமிழில், மலைக் கள்ளன் போல ஒருவர் பாடலுக்கு நடுவே குதிப்பார். அவர் குரல் கேட்கும் வரை கோமாளித்தனமான என் ஆட்டம் தொடரும். அரை முதிர்ந்த காலத்தில் என் பாலிய நினைவுகளை தற்போது  மீட்டுவதையும் , இன்னும் வயது முதிர்ந்த காலத்தில் மீட்டிப் பார்க்கலாம் என்பதையும் எண்ணங்களால் தாண்டிக் கொண்டு பாடலுக்கு வருகிறேன்.  இது மாத்தளன் என்கிற திரைப்படத்தில் இருந்து.


இலங்கையின் இசைப்பண்டிதர் , 'பண்டிட்' .திரு."அமரதேவா" அவர்களைப் பற்றிப் பேசாமல் சிங்களப் பாடல்கள் பற்றிப் பேசுதல் முறையே இல்லை. என்ன அருமையான குரல் வளம். மெய்மறத்தல் என்கிற ஒன்றை இவர் குரல் மூலமாகத் தான் பரீட்சயத்துக்குக் கொண்டுவந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அரிய பல பாடல்கள் 'யூ- டியூப்பில்' தேடித் தேடியும் கிடைக்கவில்லை.


 "ஆராதனா" என்கிற ஒரு பாடல், யாழ்ப்பாணத்தில் நான் பள்ளிக் கூடம் போகத் தொடங்கின சின்னக் காலத்தைக் கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்தும். பெரியப்பாவின் புதுக் காரில் அமர்ந்து கொண்டு, ரிக்கார்டரை இயக்கத்தெரியாமல் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிற பிராயம். அப்பா இந்தப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பை பெரியப்பா புதுக்கார் வாங்கியதுக்குப் பரிசாகக் கொடுக்கிறார். அதன் பிறகு அந்தக் கார் விற்கு மட்டும் பல வருசங்களாக இந்தப் பாட்டுத் தொகுப்பு மட்டுமே இருந்தது வேற கதை. எப்பவுமே இந்தப் பாட்டுத்தான். சுண்டிக்குளி லோவர் ஸ்கூல்  சின்ன கேட் வாசலில் இறங்கும் மட்டும் இந்தப் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கும். 

அடுக்கு டிரிங் போத்திலை கழுத்தில் மாட்டிக் கொண்டு புறப்படும் போதும் பின்னணியில் இதே இசை ஒலிக்கிறதாய்க் கற்பனை பண்ணிக் கொள்ளுவேன்.ஒரு வண்ணத்திப் பூச்சியின் இறக்கக்கையை விரிப்பதற்குத் தேவையான சக்தியை இந்தப் பாடல் தருவது போல உணர்ந்திருக்கிறேன். நான் வண்ணத்துப்பூச்சியாக அந்தக் காலத்தில் இருந்தும் இருக்கிறேன். இந்தப் பாடலுள் உபயோகிக்கப் பட்டிருக்கும் சித்தாரினதும், புல்லாங்குழலது வருடலும் சொல்லி மாளாதவை.  இது முதலாம் வகுப்புப் படிக்கிற காலத்தில். அதற்குப் பிறகு நான் மூண்டாம் வகுப்பு வரைக்கும் முறையாப் பள்ளிக் கூடமே போகாதது வேற கதை. 




பண்டிட்டின் இன்னொரு பாடல், வயது தளர்ந்து போன காலத்தில் படித்தது. அத்தனைக்குள்ளும் குரலில் சின்னதொரு தொய்வு கூட இல்லை. இசையோடு இழைந்து போய்க் கிடக்கிற நிலையில் அவர் இந்தப் பாடலைப் படித்திருப்பார். காற்று மட்டும் புகும் அவர் வார்த்தைக்குள் புத்தனின் அபவாதங்கள்  நிறைவு தருகிரதைப் போலவிருக்கும். யாழ்ப்பாணத்தில் முன்பு அடிக்கடி ஊரடங்குச் சட்டம் போடுவார்கள். வெளியில் யாருமே போகவியலாத நேரத்தில், வீட்டிற்கு மிக அருகே இருக்கிற மதவடியில், அப்பாவும், விதானை அங்கிளும், வரதி மாமாவுமாகச் சேர்ந்து கூடிக் கூடிக் கதைப்பினம். 

அப்பை எல்லாம்  பற்றரி ரேடியோவும்,இந்தப் பாடும் தான் அப்பாவிண்ட கைவசமிருக்கும். ஆமிக்காரங்கள் ஆரும் வார மாதிரித் தெரிஞ்சால் இந்தப் பாட்டைகே கொஞ்சம் பிலத்தாப் போட்டுட்டு சாதுப் பிள்ளையளைப் போல கதைச்சுக் கொண்டிருப்பினம். அவங்களும் தங்கட பங்குக்கு "புது சரணாய்" எண்டுட்டு போயிருவாங்கள்.சிலநேரம் இவையளின்ர கதைப்பெட்டிக்குள்ள அவங்களும் செருவாங்கள் . அப்பா வீட்ட வந்து சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். ஊரடங்குக் காலத்தில தெருவில போய் நிக்கிற அப்பாவைக் காவல் காத்துக் கொண்டிருக்கிற அம்மாவுக்குக் காவலாய் நான் அங்கேயும் இங்கேயுமாக புலன் விசாரணை செய்துகொண்டிருப்பேன். இனிய நினைவுகள். 



இப்ப இந்தப் பாட்டைக் கேக்கையில், சொல்லடி நீ ஒரு என்று தொடங்குகின்ற ஒரு தமிழ்  சினமாப் பாடலில் இதன் சாயல் தெரிகிறது. திப்பு அந்தப் பாட்டைப் பாடியிருப்பார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் என்று நினைக்கிறேன். 

இன்னும் விக்டர் ரத்னாயக்க அவர்கள் பற்றிச் சொல்லிவிடவேண்டும். குருணாகலில் நாங்கள் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்துக்குள் மருந்துக்குக் கூடத் தமிழர்களை நாங்கள் கண்டதே இல்லை. அசல் கிராமிய, சகோதர இனத்தவர்களுடன் பழகும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அந்தக் காலங்கள் இப்போது எனக்கு நிறைந்த அனுபவத்தையும், மொழியுடன் பூரணத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறது.அந்தக் காலத்தில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன், தூய பிச்சிப்பூ நிறத்தில்  "லமா சாரி"  அணிந்து கொண்டு கையிலே நீலோற்பலத்தையும் ஏந்திக் கொண்டு துள்ளித் துள்ளி அந்த நெடிய, நிறைந்து கிடக்கும் விகாரத்துப் படிகளில் ஏறி விளையாடிய நினைவுகளும், அரசமரத்தில் பழுத்த மஞ்சள் இலைகள், ஒரு சுழழ்க்காற்றுக்கு போல பொலவென்று சிலிர்த்துக் கொண்டு பூமியின் மண் நிறம் மறைகிற அளவுக்கு அரை இஞ்சிக்கு விழுகிற பொழுதுகளில் ஒவ்வொரு அகன்று விரிந்த மஞ்சள் இலைகளையும் கைகள் கொண்டு தாவித் தாவிப் பிடிக்கிற காட்சியும், பூரிப்புடன் நினைவுக்கு வருகிறது. நானும் சந்தோஷித்துக் கொண்டு வாழ்ந்து தான் இருக்கிறேன். 

குருணாகலில் பௌத்த விகாரத்தில் தான் நான் முதன் முதலில் விக்டர் ரத்னாயக்க அவர்களைச் சந்திக்கிறேன். அப்பா என்னையும் கூட்டிக் கொண்டு போய் கதைக்கிறார். லமா சாரியுடன் (சிங்களக் குழந்தைகளின்  கலாசார உடை )நின்ற என்னைப் பார்த்து விட்டு நாங்கள் பௌத்த சிங்களர்கள் என்று நினைத்துக் கொண்டு நிறைய நேரம் அப்பாவுடன் கதைத்தார். என்னைத் தூக்கி உச்சி முகர்ந்துவிட்டுச் சென்றார். அங்கே மேடைகள் அமைத்து நிகழ்ச்சிகளும் இடம் பெரும். அன்றைக்கு முதன் முதலாகக் கேட்டது தான் இந்தப் பாடல். இத்தனை நினைவுகளையும் தூக்கிக் கொண்டு ஓடி வரும், பாடல் கேட்ட மாத்திரத்தில்.  நீண்டு வளர்ந்த கூந்தலும், சைட் பொன்ஸ் என்கிற காதோரத்துக் கிருதாக்களுடனும் கண்ட அந்த வயோதிப உருவம் இன்னமும் கண்களுக்குள் நிற்கிறது.   


 "நந்தா" மாலினி (நந்தா -மாமி )என்று உரிமையுடன் அழைக்கப்படுகிற நந்தா அம்மா, இவரின் போதிசத்துவப் பாடல்கள் மிகுந்த இரக்கத்தையும் ஜீவகாருண்யத்தையும் தந்துதவுகின்ற மாதிரி இருக்கும். இவரின் பாடல்களோடு நான் ஒன்பது வயதளவில் அறிமுகமாகிறேன்.


புலமைப்பரிசில் பரீட்சைக்காக, முன்பு பள்ளிக் கூடத்தில் பின்னேற வகுப்புக்கள் இருக்கும். அப்போதெல்லாம் அப்பா தான் வந்து கூட்டிக்கொண்டு போவார். நாலரை ஐந்து மணி இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் பள்ளிக்கூடம் விடும் (கண்டியில்) . வெயில் ஓய்ந்து போவதற்கு முன் நெற்றியிலும், பிடரிக்கழுத்திலும் பட்டு, எரிக்கும். அப்பா குடை பிடிக்கமாட்டார்.எனக்கு மட்டும் ஒரு தொப்பி இருக்கும். கண்ணை மறைத்து தெருவில் விழுத்துகின்ற அந்தத் தொப்பியுடன் என் கால்கள் அந்த எதிர்த்திசையில் இருக்கும் ஐஸ்  கடையையே நோக்கி பயணிக்கும்.


அப்பாவின் கால்களோ எனக்கு எதிர்த்திசையில் பயணிக்கும். இந்தச் சமாந்தரப் பயணம் ஒருகட்டத்தில், குறுக்கறுக்கும்.  வெறுப்பு அப்பிப் பிதுங்கும் என் உதட்டுச் சுழிப்பில் அப்பா ஒரு மாதிரி அந்தக் கடைக்குள் நுழைவார். ஐஸ் கிரீமை விட அந்தக் காலத்தில், குழந்தைகளுக்கு ஐஸ் என்று சின்னப் பொலித்தீன் பைக்குள் சக்கரீனும் , சீனியும், வெறும் பச்சைத்தண்ணியையும் சேர்த்து கலர் கலராக ஒரு ஐட்டம் பண்ணி வைத்திருப்பார்கள். எனக்கும் அது தான் பிடித்தம். அப்பா அதை வாங்கியே தர மாட்டார். எந்தத் தண்ணியில் செய்திருப்பாங்களோ, சீயக் ஊத்தை.....அது வேண்டாம் குஞ்சு....!


.............எனக்கு அது தான் வேணுஊம்ம்ம்ம ......சிணுங்கிக் கொண்டு வருகிற முதல்த்துளிக் கண்ணீரை அடைக்கப் பிரயத்தனப் படுகிற வேளை, அப்பா முதுகில் ஒன்றை வைப்பார் ஓங்கி, புளித்துப் போன அடியுடன், காந்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் தொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அவருக்கு முன்னே ஒரு தோல்வியடைந்த ராணுவ வீரனைப் போல நான் நடப்பேன்,  அப்பா கையில் ஒரு ஐஷ்கிறீமை கடைக்காரனிடம் வாங்கிக் கொண்டு என் பின்னால் வருவார். சரியாக இந்த இடம், கண்டிக் கட்டுக்களைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் இருக்கிற மணிக்கூட்டுக் கோபுரத்துக்குப் போகிற வழியில் நிகழும். தேம்புகின்ற முகத்துடன் இருக்கும் என்னை அந்த சின்ன மினி பஸ்சில் மடியில் உட்கார வைத்துக் கொள்வார். கையில் ஐஸ்க் கிறீமைத் தருவார். கண்ணீரின் உப்பும் , தின்பண்டத்தின் சுவையும் கலக்கிற உணர்வில் பிதுங்கிய உதடுகளுடன் வாய், மூக்கு, கன்னம் எல்லாவற்றிலும் ஐஸ்க் கிறீம் ஓட்டச் சுவைத்துக் கொண்டே தேம்புவேன். பக்கத்து இருக்கையில் ஆராவது ஒரு கிழம் வந்து இருந்து கொண்டு "துவே அண்டன்னவாத?" எண்டு கேக்கும். 


...........நல்லா வாயில வரும் சொல்லுறதுக்கு. இப்ப வார மாதிரி சொல்லுறதுக்கு அப்பா  ஏதும் வார்த்தைகள் தெரியாததால முணுக் முணுக்கென்று முட்டைக் கண்ணீர் மட்டும் தான் வரும். அப்பா சாடையாய் வாய்க்குள் சிரித்துக் கொண்டிருப்பார். அவர் சேட்டு முழுக்க ஐஸ் கிறீம் கறை பட்டிருக்கும். பஸ் புறப்படுகிற தருணத்தில் தான் இந்தப் பாட்டு ஒலிக்கும்.தெருவில் லாட்டரி அதிஷ்டச் சீட்டு விற்பவனின் குரலையும் தாண்டி எங்கிருந்தோ நந்தா மாலினி அந்த மினி பஸ்சுக்குள் வருவார். புளகாங்கிதமாகப் பாடுவார்.

 தெருவின் ஊத்தையான வெப்பக் காற்று முகத்தில் படிய கண்கள் சொருகிக் கொண்டு நித்திரை வரும். ஆனாலும் கனவுகளிலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நித்திரையின் படிகளில் மேலே மேலே எழுந்து அந்தரத்தில் மிதக்கிற ஒரு தோரணையைத் தரும். திருப்பித் திருப்பி இந்தப்பாட்டைத் தான் "பள்ளஹாப் பார" பஸ்க் காரன் எப்பவுமே போடுவான். அவன் நினைச்சே இருக்கமாட்டான் அவனின்ட பாட்டைப் பற்றி அந்தக் குழந்தைப் பிள்ளை மூஞ்சிப்புத்தகத்தில எழுதுமென்று, நானும் உப்பிடியாகுமென்று நினைக்கவேயில்லை. நினைக்காத எத்தனையோ நடந்து விடுகிற சந்தர்ப்பங்களில் நிலைத்து நிற்கிற நினைவுகளைப் புரட்டிப் பார்ப்பதில் எத்தனை ஆனந்தம்.

தூங்கிப் போன என்னை வசு  நிறுத்தத்தில் இருந்து வீடு வரைக்கும் அப்பா தோளில் தூக்கிக் கொண்டே வந்து கிடத்துவார். அன்றைக்கு அப்பா அடித்திருந்தால், அன்றைய மாலை அதிக நேரம் படிக்கத் தேவையில்லை, அப்படி ஒரு எழுதாத கணக்கு வீட்டில் இருக்கிறது. ஆகையால் அன்றைக்கு நெடு நேரம் வரை தூங்குவேன். தூக்கத்தில் கனவு வரும், நான் வளர்ந்து பெரியவளாகி என்று அது விரிந்து கொண்டே போகும். உண்மையில் நான் வளர்ந்து பெரியவளாகி, அதுவெல்லாம் நடந்து நிற்கிற வேளைகளில் இப்போது கனவுகளே வருவதில்லை.அல்லது அதற்கான தளம் நிறுத்தப்பட்டிருந்தது. 


இதோ அந்தப் பாடல்.  


நிறைய நாட்களுப் பிறகு ஒரு ஆறு மாதம் முன்பு ''நந்தா மாலினி' அவர்களை ஒரு செயற்திட்ட அறிக்கைக்காக நேரிலே அவரது இல்லத்தில் சந்திக்கிற வாய்ப்புக் கிட்டியது. அப்போதும் இதே பாடலை நேரில் கேட்டேன். அதே ஒன்பது வயது உணர்வு, மனிதனின் ஆழமான உணர்ச்சிகள் எப்போதும் ஒரேமாதிரித்தான் இருக்கின்றது, மனிதன் என்கிற உரு மட்டும் தான் கொள்கைகளில் இருந்து மாறிக்கொண்டு வருகிறது. 

இசையுடன் வாழ்ந்த காலங்கள் இன்னமும், முஹம்மது ராபி,ஷாந்தன், ஆஷா போஸ்லே, டி.எம்.எஸ்  என்று  தொடர்ந்துகொண்டே இருக்கும். என் நிலைப்பையும் தாண்டி ....,


நிலா -
2009

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி