Skip to main content

மரபழிந்த ஓவியங்களும் , முரணான என் கவிதைகளும்...



                      

வெளிச்சம் குறைவாய்......

            

காலை நேர  கைசிகப் பண்ணினது நாதத்தில்,
மல்லிகை இதழ்கள் விரிகின்றது
தேனின் திரவியத்தை சுமந்து கொண்டு,

யாகாவாரினும் நாகாக்க-
நான் தவறியதால்
சயங்கொள்ள முடியவில்லை.
சாய்மனையில் இருக்கின்றேன்
எதுவும் இயலாதபடிக்கு...,

விமோச்சனப் பலன் காண கௌளீயைத்
தேடினேன் -
இல்லையது என் முகட்டிலே .

விட்டத்திற்கு வேறுபட்டதாய்
நிற்கிறது -
கூரையின் தாவாரம்.
தாவர சங்கமங்களை எல்லாம்
தாரை வார்த்ததட்குப் பின்னும்
மண்ணும் ,மழையும் ,மடுவும்
கூடிய சங்கமமொன்று
தேவையாய் இருக்கிறது.

முதுமையின் பலம் ,
சாவுக்கு அந்தம் பிடிக்கிறதா ?
தெரு முனையிலிருக்கின்ற
நாய்க்குத் தெரிகிறது - என் சாவின்
ஜனனம் -அது
ஊளை செய்து நமனை எதிர் கொள்கிறது ,
சில காலமாய்.....

பழுத்த இலையின் இருப்பு
எத்தனை காலம் ?
சவங்காவிகளுக்கா
பஞ்சம் இங்கு......?

காலை நேரம் -
நியமம் தவறாமல் கைசிகப் பண்
கேட்கிறது எனக்கு -
நேரிசலடைந்த வாகன இரைச்சல் மத்தியிலும் .

என்னைத்தவிர நிழல் மட்டும்
தெரிகின்றது இறப்பின் சாயலுடன்
ரசக் கண்ணாடியில்.......

மூப்பேறிய ஆன்மாவுக்கு ,
சந்தத்தின் உன்னதம்
புரிவதில்லை.
சத்தத்திலிருந்து சந்தத்தை பிரித்தறிய
நிரம்பக் காலம் எடுக்கிறது -
வாழ்க்கை சம்பந்தமான அவாவினால் .-

ராகத்திலிருக்கும் பாவனைகள்
நெடு நாளைய நிறச்சூரியனைப் போல்
கண் கூச வைக்கிறது .

தூணிலே சாய்ந்து கொண்டதும் நின்மதி பிறக்கின்றது.
இப்போதைக்கு இப்போது -
இப்போதைக்கு போதும்-
இப்'போதை''க்கும் போதும் !

கண்ணிலிருந்து மறைகின்றது வண்ணத்து பூச்சி ஈறான தென்னை மரங்கள் -
என்னுடலைத் தவிர ,

உடல் சம்பந்தமான எனக்கு -
'லா லா பாசம்' கிடைக்கட்டும்
சாவிலே ........

வெளியே, வெளிச்சம் குறைவாய் இருக்கிறது -
ஏதும் தேடிப் பிடிக்க -,

       ***

 

                                                                       
       


அடைகிற ஆசையில்......                    


அட.,
நீண்ட நாட்களுக்கு பின்
அவன்..

முறுவலிக்கின்றான்
மீசை நெளிய -
மாபாவம் செய்த
சந்நியாசியைப் போல நான்-கூனிக்
குறுகிப் போனேன்.

துள்ளியது இளமைஎன்றால்...,
பொதி சுமப்பது........................?

சன்மார்க்கத்திலிருந்து
விலக வைக்கும்
சுடுகாட்டுச் சாம்பல் பூசிய
உனதுடல்................,

ஏக்கத்திற்கு மேல்
ஏக்கம் கொள்ள வைக்கிறது .-
'பிடியதன் உரு உமை கொள,'
'எனததன் உரு நான் கொள..'..

எனக்கும் கூட
ஓங்காரத்தின் புத்திரனைத் தருவாயா...?

ஒளியினது நாதத்தில் ,
தழைத்த எனதுடல் -
மாயைகள் பற்றி
உழல்கிறது .

நான்
சகலனாதலால் .......
மும்மலங்களையும் களைந்து..
மலச் சிக்கலில் இருந்து விடுபட
நார்ச் சத்துத்தா......!

மேரு மலையில்
மீதமிருக்கும் பாச அமுதத்தை
எனக்குத் தா.....,
எனக்கு நித்தியத்துவம்
வேண்டும்...,,

அடக் கடவுளே...........
உனக்கென்ன தான் தெரியும்....,
என்னையும் விட,...............?

முட்டாள்க் கடவுளே
நிழலுக்குப் பின்னால் அந்தம் பிடிக்கிற வெற்றிச் சூரியனும்,
நிர்மூலத்துக்குப் பின்னாலே தேய்ந்து  போகிற நிலவொளியும்,
கமண்டத்துக்குளிருந்து  வரும்  உன்  உச்சி  குளிர்ந்த  நீரையும்   தவிர  -
அவதாரமெடுத்த கடவுளே,
அகண்டிதாகாரமும், அருவத்துக்கும்  பின்னாலுமான-
உன்னிலை தெரியுமா உனக்கு..............?

சத்தினி பாதம்,
திருவடி பேறு,
இதெல்லாம்
எந்தக் காலத்து
ஆன்மாக்களுக்காக.......?

மெல்லிய தாள்களிலான பச்சைப் பணமூடையையும்.,
சரிந்து விழுகிற  தொந்திப்  பாட்டையும்
கவனிக்காத
கடவுளே.............

உன்னையே தான்
இன்னமும் நான்அடைய விரும்புகிறேன்.
உன்னையே
கரம் பிடிக்க யனிக்கிறேன்.

என் வார்த்தைகளையும் ,
வார்ப்புடலையும் ,
கொழுந்து விட்டெரீயும்
விடலைத் தீயையும்
உனக்கெனத் தான்
குரு தெட்சினையாய் ...........

மெதுவாகச் சொல்கிறேன் ,
என் காதல்
ஆலாபனைகளை................
பிறகு , இன்னும் பிறகு....,
என்னை இமய மலைக்கு
கூட்டிச் சென்ற பின்.., சொல்கிறேன்....!

ஐயனே,,,,,,,
தேசீயவாதத்திட்கும் ,
உனக்கும்
என்னது வேறுபாடு...?

அறியாப் பொருள் என்ற
ஆணவம் உன்னிடம் மட்டும்
தகுமா....?

என் நேசம்
எத்தனை ஆகாமியம் என்பது
உனக்கு புரியாதா ....?

கடவுளின் லீலைகளுக்கு பின்னாலும்
லீலைகளுண்டு .

எனக்கும் உண்டு -
எதுவுக்கும் பின்னாலும்..............,
தேய்ந்து போன சாபம்.!


நிலா -

Comments

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி